ஜாமின்தான் இல்லை... வீட்டு சாப்பாடையாவது அனுமதிங்க.. ப சிதம்பரம் கோரிக்கை மனு
டெல்லி: டெல்லி திகார் சிறையில் இருக்கும் ப சிதம்பரம், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துவரப்பட்ட உணவுகளை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப சிதம்பரத்தை சிபிஐ காவலில் 14 நாட்கள் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல் முடிந்த உடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ப சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
நீதிமன்றம் தள்ளுபடி
இந்நிலையில் சிதம்பரம் தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவின் மீது வாதங்கள் நிறைவடைந்தது நேற்று தீர்ப்பு அளித்த நீதிபதி, ப சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அக்.3ல் விசாரணை
இந்நிலையில் இன்று டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். வீட்டில் இருந்து சமைத்து எடுத்துவரப்பட்ட உணவுகளை சாப்பபிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். வரும் அக்டோபர் 3ம் தேதி காவல்முடிவடையும் நிலையில் அன்றைக்கு ப சிதம்பரம் இந்த வீட்டு உணவு கோரிய மனு விசாரணைக்கு வருகிறது.
சிறை உணவு சாப்பிடணும்
முன்னதாக டெல்லி திகார் சிறையின் விதிப்படி ப.சிதம்பரம் மூத்த குடிமகன், முன்னாள் நிதியமைச்சர், எம்.பி. என்பதால் மரக்கட்டில் மட்டும் மெத்தையின்றி வழங்கப்படுகிறது. சிறையில் தயார் செய்யப்பட்டஉணவுகளைத்தான் ப.சிதம்பரம் சாப்பிட வேண்டும். மதிய உணவு, இரவு உணவுடன் பருப்பு, ஒரு காய், 4 முதல் 5 சப்பாத்திகள் வழங்கப்படுகிறது.
உடைகள் அளிக்கலாம்
ப.சிதம்பரம் நீதிமன்ற அனுமதிபெற்று வேறு உணவுகளை வரவழைத்து சாப்பிடலாம். அதற்கு உரிமை உண்டு. நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ப.சிதம்பரத்துக்கு தேவையான உடைகளை அவர்களின் குடும்பத்தினர் அளிக்கலாம்.அதற்கு அனுமதி வழங்கப்ட்டுள்ளது.