சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ-யால் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிஐ பின்னர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைத்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தொடர்ந்து வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.
எனினும் ப சிதம்பரம் முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டது.
அமலாக்கத்துறை ப சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகிறது., நாளையுடன் ப சிதம்பரம் காவல் முடிய உள்ள நிலையில், நாளை மீண்டும் ப சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால் ப சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது.