ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் அரசியல் கட்சி தலைவர்கள்... ப.சிதம்பரம் கடும் கண்டனம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் திடீரென 40,000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளும் அமர்நாத் யாத்ரீகர்களும் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு எச்சரித்தது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்குகிற அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை மத்திய அரசு நீக்கக் கூடும் என்கிற கருத்து நிலவுகிறது. மேலும் ஜம்மு காஷ்மீரை 3 பகுதிகளாக பிரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
The house arrest of J&K leaders is a signal that the government will defy all democratic norms and principles to achieve its objects. I condemn the house arrests.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 5, 2019
அதேநேரத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மிகப் பெரும் தாக்குதலுக்கு மத்திய அரசு திட்டமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் உள்ளிட்டோர் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். முன்னாள் முதல்வர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பதன் மூலம் ஜனநாயக விழுமியங்களை மத்திய அரசு தூக்கி எறிந்து வருவதை வெளிப்படுத்துகிறது. இக்கைது நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என பதிவிட்டுள்ளார்.