இரவு முழுக்க லாக் - அப்பில் தூங்கிய ப.சி.. மதியம் வரை வெளியே வர மாட்டார்.. சிபிஐ தீவிர விசாரணை!
நேற்று கைது செய்யப்பட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இரவு முழுக்க சிபிஐ தலைமையகத்தில் உள்ள லாக் அப்பில் தூங்கினார்.
Recommended Video
டெல்லி: நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இரவு முழுக்க சிபிஐ தலைமையகத்தில் உள்ள லாக் அப்பில் தூங்கினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிக்கி இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிற்குள் அதிரடியாக எகிறி குதித்த சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
எங்கு இருந்தார்
ப. சிதம்பரம் நேற்று இரவு முழுக்க சிபிஐ தலைமையகத்தில்தான் இருந்தார். அவரை கைது செய்து அழைத்து சென்ற சிபிஐ உடனடியாக சிபிஐ தலைமையகத்தில் வைத்து விசாரணை செய்தது. நேற்று இரவு இரண்டு மணி நேரம் சிபிஐ அவரை விசாரணை செய்தது.
எப்போது சென்றார்
அதன்பின் 1.30 மணிக்கு பிறகு ப. சிதம்பரம் ஓய்வு எடுக்கவும் தூங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ப. சிதம்பரம் இரவு முழுக்க லாக் அப்பில் தூங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. லாக் அப்பிற்கு வெளியே காவலுக்கு சிபிஐ அதிகாரிகள் இருந்தனர். அவருக்கு உதவவும் சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
என்ன பாதுகாப்பு
அவர் உள்ளே இருப்பதால் தற்போது சிபிஐ தலைமாமி அலுவலகம் முன் மிக கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் ரிஷி குமார் சுக்லா முன்னிலையில் இன்று காலை ப. சிதம்பரம் விசாரிக்கப்பட உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் நேற்று இரவு முக்கியமான கேள்விகள், விளக்கங்கள் கேட்கப்பட்டு இருக்கிறது.
எப்போது ஆஜர்
இன்று மதியம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அதனால் இன்றும் அவரிடம் கடுமையான விசாரணை நடக்க வாய்ப்புள்ளது. இன்று மதியம் வரை ப. சிதம்பரம் எங்கும் வெளியே வர மாட்டார், இடமாற்றம் செய்யப்பட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை காவலில் எடுத்த பின்புதான் சிபிஐ இடம்மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்.