மீண்டும் கருப்பு கோட்.. வக்கீலாக அதிரடி கம் பேக் தந்த ப.சி.. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாஸ் வாதம்!
தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார்.
டெல்லி: தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை இன்று நடந்து வருகிறது
பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் அதை செய்யாமல் தேர்தல் நடத்துகிறார்கள். இதனால் அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னர் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலோடு சேர்ந்து தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது..
விசாரணை
தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் சூரிய காந்த், பூஷன் ராமகிருஷ்னன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆஜராகி உள்ளார். கிட்டத்தட்ட 125 நாட்களுக்கு பிறகு அவர் வக்கீல் உடையை உடுக்கிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்
ஆம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் 106 நாட்கள் சிறையில் இருந்தார். அதன்பின் அவர் கடந்த வாரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பொருளாதார சீர்கேடு குறித்து ப.சிதம்பரம் பேசினார். தற்போது அவர் வழக்குகளில் ஆஜராக தொடங்கி உள்ளார்.
தலைமை நீதிபதி
இன்று அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன் வாதிட்டார். உள்ளாட்சி தேர்தலை ஏன் இப்போது ஒத்தி வைக்க வேண்டும், இதில் நடக்க உள்ள முறைகேடுகள் குறித்தும் ப. சிதம்பரம் வாதிட்டார். அவரின் இந்த வாதம், வழக்கில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
என்ன உடை
முன்னதாக வக்கீல் உடையில் ப. சிதம்பரம் வருவதை பார்த்த ஜூனியர் வக்கீல்கள் பலர் அவரிடம் சென்று பேசினார்கள். அவர் மீண்டும் வாதிட வந்ததால் அவருக்கு கைகொடுத்து பாராட்டினார்கள். இந்த வழக்கு முழுக்க ப. சிதம்பரம் காங்கிரஸ் சார்பாக ஆஜராவார் என்பது குறிப்பிடத்தக்கது.