74வது பிறந்த நாளை சிறையில் கழிக்கப் போகும் ப.சிதம்பரம்.. பெரும் துயரத்தில் ஆதரவாளர்கள்
டெல்லி: 74ஆவது பிறந்தநாளன்று திகார் சிறையில் ப.சிதம்பரம் இருப்பார் என்பதால் அவரது ஆதரவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்தார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பு வாதம் செய்தது. அவ்வாறு கொடுத்தால் ஆதாரங்களை அவர் அழித்து விடுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சிதம்பரமோ எனக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில் நான் எந்த ஆதாரத்தை அழித்து விட போகிறேன் என கேள்வி எழுப்பினார்.
ஒரே நாளில் நாலாபுறமும் "கார்னர்" செய்யப்பட்ட ப.சிதம்பரம்.. சிறை செல்கிறார்.. அதிர்ச்சியில் காங்.!
மேலும் தனது வயதை கருத்தில் கொண்டு திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதி ஷைனியோ ப.சிதம்பரத்தை வரும் 19-ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் 74-ஆவது பிறந்தநாள் வரும் 16-ஆம் தேதி வருகிறது. 19-ஆம் தேதி வரை சிறையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர் பிறந்தநாளன்று சிறையில் இருப்பார் என்பதை நினைத்து ஆதரவாளர்கள் வேதனை தெரிவித்தனர்.