ஐஎன்எக்ஸ் மீடியா.. ப.சிதம்பரத்தை கைது செய்ய நாளை வரை தடை.. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒத்திவைப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைதுக்கு எதிராக ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வாதம் நாளையும் தொடர்ந்து நடக்கும்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார்.
அதோடு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுக்க உத்தரவு பிறப்பித்தது. இவர் 5 நாட்களாக சிபிஐ மூலம் கடுமையாக விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல்நாள் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ப. சிதம்பரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. அதில், ப. சிதம்பரத்திற்கு மேலும் ஐந்து நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் (ஆகஸ்ட் 30ம் தேதி வரை) விசாரிக்க சிபிஐக்கு அனுமதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் ப. சிதம்பரம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அதில் டெல்லி ஹைகோர்ட் உத்தரவின் பெயரில் சிபிஐ ப. சிதம்பரத்தை காவல் எடுத்ததே தவறு. அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு மனுவில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று முன் ஜாமீன் கோரப்பட்டுள்ளது.
இதில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான வழக்கில் மட்டும் ப. சிதம்பரத்திற்கு கொஞ்சம் சாதகமான தீர்ப்பு வந்தது. அதாவது இன்று மாலை வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய கூடாது என்று அமலாக்கத்துறை வழக்கில் இடைக்கால முன் ஜாமீன் அளித்தது.
இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு மனுக்கள் மீதும் இன்று விசாரணை நடந்தது. நேற்று ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதம் செய்தனர்.இந்த வாதத்திற்கு பதில் அளிக்க சிபிஐ தரப்பு கூடுதலாக 24 மணி நேரம் கேட்டது.
இதனால் இந்த வழக்கு இன்று மதியம் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள். ப.சிதம்பரம் தரப்பு வைத்த அத்தனை வாதங்களுக்கும் இன்று பதிலளிக்கப்படும் என்று சிபிஐ தரப்பு கூறியது. அதன்படியே ப. சிதம்பரம் தரப்பு நேற்று செய்த வாதத்திற்கு இன்று பதில் வழங்கப்பட்டது. ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பாக சொலீஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.
அவர் தனது வாதத்தில், ப. சிதம்பரம் அறிவாளி, சாதூர்யமிக்கவர். புத்திசாலித்தனமாக ப. சிதம்பரம் முறைகேடு செய்தார். சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தால் உலகம் முழுக்க கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. சில நாடுகளில் சட்டவிரோத பண பரிமாற்றம் மிகப்பெரிய கிரிமினல் குற்றமாக பார்க்கடுகிறது.
சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் செலவு செய்யப்படும் பணமும் முதலீடு செய்து வரும் வருமானமும் கூட முறைகேடானதுதான். நாம் இங்கே மிகவும் புத்திசாலியான மனிதர்களுடன் மோதிக்கொண்டு இருக்கிறோம். ஒரு முட்டாள் இப்படி கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடியாது, என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை நாளை காலை 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.