இந்தியாவுக்கு போட்டியாக இலங்கையை வளைக்கப் பார்க்கும் பாகிஸ்தான்... விமானப் படைக்கு உதவுகிறது!
டெல்லி: அதிகார மாற்றங்கள் நிகழ்ந்துள்ள இலங்கையை தம் வசம் வைத்துக் கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு போட்டியாக பாகிஸ்தானும் இலங்கை பக்கம் கவனத்தை செலுத்தி வருகிறது.
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சேவும் பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பதவி ஏற்றனர். கோத்தபாய ராஜ்பக்சே தமது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகை தந்தார்.
அவரைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். தற்போது மகிந்த ராஜபக்சேவும் இந்தியா வருகை தந்திருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கடற் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதில் மும்முரமாக இருக்கிறது. இதனால்தான் இந்தியாவை உறவு நாடு என்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளை நட்பு நாடு என்றும் மகிந்த ராஜபக்சே சுட்டிக்காட்டியிருந்தார்.
மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு முன்னதாக கொழும்பில் பாகிஸ்தான் விமான படை தளபதி முஜாஹித் அன்வர் கான் சந்தித்து பேசியிருந்தார். இலங்கையின் விமான படையை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் உதவ விரும்புவதாக இச்சந்திப்பில் மகிந்தவிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை மகிந்த ராஜபக்சே தரப்பும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுடன் இலங்கை கை கோர்த்துக் கொண்டு செயல்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. தற்போதைய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ,1970களில் ராணுவத்தில் இணைந்த போது பாகிஸ்தானில்தான் பயிற்சி பெற்றார். வங்கதேச யுத்தத்தின் போது , பாகிஸ்தான் போர் விமானங்கள் தரை இறங்க உதவி செய்ததும் இலங்கைதான்.
தற்போது இலங்கை விவகாரத்தில் இந்தியா தீவிரமாக கவனம் செலுத்தும் நிலையில் பாகிஸ்தானும் போட்டிக்கு களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.