பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பாகிஸ்தான் உலகை ஏமாற்றுகிறது.. இந்தியா
டெல்லி: பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி, பாகிஸ்தான் உலக நாடுகளை ஏமாற்றி வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி இந்தியா பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உலகில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ள பிற நாடுகளும் பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.
குறிப்பாக மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பின்னணியில் இருந்தவன் ஹபீஸ் சயீத். இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கும் காரணமானவன் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், இவன் பாகிஸ்தானில் ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளான். இந்த நிலையில் ஹபீஸ் சயீத், மற்றும் அவனது நெருக்கமான சகாக்கள் 12 பேர் ஆகியோர் மீது பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டு தொடர்பாக 23 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஜமாத் உத் தாவா இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்., தீவிரவாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கையைப் பொருத்துதான் எதிர்காலத்தில் நிதி வழங்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்திருப்பதால் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவிடம் இருந்து பல பில்லியன் டாலர் பணத்தை உதவியாகப் பெற்றபோதிலும், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பொய் கூறுவதாகவும், ஏமாற்றுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார்.
ஹபீஸ் சயீத் மீது நிதியுதவி குற்றசாட்டுகள் மட்டுமே கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர அவன் மீது இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவோ, அல்லது இந்தியாவிடம் அவனை கைது செய்து ஒப்படைக்கவோ முன்வரவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “பயங்கரவாதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் உலக நாடுகளை ஏமாற்ற நினைக்கிறது. அந்நாட்டின் மேம்போக்கான நடவடைக்கைகளைப் பார்த்து நாம் முட்டாள்களாக்கப்பட்டு விடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.