இந்திய தூதரை திருப்பி அனுப்புகிறது.. இந்தியாவுடான அனைத்து ராஜாங்க உறவுகளையும் நிறுத்த பாக். முடிவு
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவுடனான ராஜாங்க ரீதியான அனைத்து உறவுகளையும் நிறுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய தூதரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் பாகிஸ்தான், தனது நாட்டு தூதரை திரும்ப அழைத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பிரச்சனை நிலவி வருகிறது. சுதந்திரம் அடைந்த பின் இருந்தே நிலவும் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி தலைமையிலான இந்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதை நாடாளுமன்றத்திலும் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு சலுகைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இருயூனியன் பிரதேசங்களாக உருமாறுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இந்தியா செய்து வருவது அப்பட்டமான மனிதஉரிமை மீறல் என்றும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சட்டவிரோதம் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம்.. பாகிஸ்தான் பகிரங்க அறிவிப்பு.. முற்றும் மோதல்
ஜம்மு காஷ்மீரில் இந்தியா செய்த நடவடிக்கைக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் அதிரடியான சில முடிவுகளை எடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரோஷி, பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக் மற்றும் பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் இன்று இஸ்லாமாபாத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் 370வது அரசியல் சாசன பிரிவு ரத்து செய்யப்ப்டடதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியான அனைத்து உறவுகளையும் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியாவை திருப்பி அனுப்ப உள்ளது. அத்துடன் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இந்த மாதம் பொறுப்பேற்பதாக இருந்த மொயின் உல் குக்கை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவுடனான வர்த்தக உறவு ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.