பஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்!
Recommended Video
டெல்லி: பஞ்சாப் பகுதிக்குள் ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பறக்கவிட்டதால் எல்லையில் பாதுகாப்பு படையினர் கூடுதல் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி ஊடுருவல் போக்கில் பாகிஸ்தான் புதிய பாணியை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆளில்லா விமானங்களை அனுப்பி அதில் இருந்து ஆயுதங்களை வீசி வருகிறது.
இந்த புதிய பாணிக்கு தக்க பதிலடி தரப்படும் என பாதுகாப்பு தரப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுத சப்ளை செய்திருக்கிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் கடந்த செப்டம்பர் 9ந்- தேதி முதல் 16-ந் தேதி வரை 8 முறை பஞ்சாப் எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டு காலிஸ்தான் ஜிந்தாபாத் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்திருக்கிறது. தற்போது நேற்று இரவு 10 மணி முதல் 10.40 மணிக்குள் மீண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடனான ஆளில்லா விமானத்தை பஞ்சாப் பகுதிக்குள் பறக்கவிட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் இந்த ஆளில்லா ஆயுத விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர். இதனால் எல்லைகளில் தீவிர உஷார் நிலையில் ராணுவத்தினர் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 24-ந் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து சோழா சாகிப் என்ற கிராமத்தில் ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.