ஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்
டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூல் நகருக்கு சென்ற, ஸ்பைஸ் ஜெட்டுக்கு சொந்தமான, இந்திய பயணிகள் விமானத்தை கடந்த மாதம் தங்கள் வான்வெளியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாகிஸ்தான் போர் விமானங்கள் தடுத்து நிறுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இரண்டு பாகிஸ்தானிய எஃப் -16 ரக ஜெட் போர் விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை சுற்றிவளைத்து, அதன் பறக்கும் உயரத்தை குறைக்க கூறியுள்ளன. விமானத்தின், விவரங்களை அவர்களிடம் தெரிவிக்கும்படி பைலட்டிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் செப்டம்பர் 23ம் தேதி நடந்துள்ளது. இப்போது, அதுகுறித்த தகவலை, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் விமானப்படையிடம் சிக்கிய விமானம் எஸ்.ஜி -21 என தெரியவந்துள்ளது. இது டெல்லியில் இருந்து காபூலுக்கு சுமார் 120 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது இந்த திடுக்கிடும் சம்பவத்தை எதிர்கொண்டது.
பாகிஸ்தான் வான்வெளி இந்திய விமானங்களுக்கு மூடப்படாத காலகட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானங்கள் இடைமறித்ததும், ஸ்பைஸ்ஜெட் விமானி, பாகிஸ்தான் எஃப் -16 ஜெட் விமானிகளுக்கு விளக்கமளித்துள்ளார். "இது ஸ்பைஸ்ஜெட், இந்திய பயணிகள் விமானம், இது பயணிகளை ஏற்றிச் செல்கிறது. ஷெட்யூல்படி காபூலுக்கு செல்கிறது" என்று விமானி அப்போது விளக்கம் அளித்துள்ளார்.
எஃப் -16 பாகிஸ்தான் போர் விமானங்கள் ஸ்பைஸ்ஜெட்டை சுற்றி வளைத்தபோது, பாகிஸ்தான் ஜெட் விமானங்களையும், அவற்றின் விமானிகளையும் நமது பயணிகளால் தெளிவாக பார்க்க முடிந்ததாம்.
விமானத்தில் அன்றைய தினம், பயணித்த ஒருவர், பெயர் தெரிவிக்காமல், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "பாகிஸ்தான் போர் விமானி ஸ்பைஸ்ஜெட் விமானிக்கு கையை ஆட்டி விமானத்தின் பறக்கும் உயரத்தை குறைக்க அறிவுறுத்தியதை நாங்கள் பார்க்க முடிந்தது" என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு விமானத்திற்கும் ஒரு குறியீடு உள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானம் 'எஸ்.ஜி' என்ற குறியீட்டால், அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு எப்படி குழப்பத்தை ஏற்படுத்தியது என புரியவில்லை. ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் குறியீடு 'ஐ.ஏ' என்று தவறாகப் புரிந்துகொண்டு, பாகிஸ்தான் விமானப்படை இவ்வாறு இடைமறித்துள்ளது. இந்திய ராணுவம் அல்லது இந்திய விமானப்படை என்பதுதான் ஐ.ஏ குறியீட்டின் அர்த்தமாகும்.
ஸ்பைஸ்ஜெட் விமானி, பாகிஸ்தான், போர் விமானிகளுக்கு உரிய விளக்கத்தை அளித்தபோதிலும், பாக். விமானிகளின் அச்சம் தீரவில்லையாம். ஆப்கானிஸ்தானுக்குள் இந்திய விமானம், நுழையும் வரை பாகிஸ்தான் போர் விமானங்கள், ஸ்பைஸ்ஜெட்டை பின்தொடர்ந்தே வந்துள்ளன. பாகிஸ்தான் வான்வெளியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் வெளியேற்றியதை உறுதி செய்த் பிறகே, பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பியுள்ளன.
பாகி்ஸ்தான் நாட்டுக்குள் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்ட தீவிரவாதிகள் முகாமை, இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தகர்த்தன. இதையடுத்து, இந்தியாவிடமிருந்து எந்த விமானம் சென்றாலும், பாகிஸ்தான் அச்சப்படுவது வாடிக்கையாகிவிட்டது என்பதற்கு, இந்த சம்பவம் ஒரு உதாரணம்.