மன்மோகன் சிங் மரியாதைக்குரியவர்... பாகிஸ்தான் அமைச்சர் திடீர் புகழாரம்
Recommended Video
டெல்லி: நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுப்போம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சீக்கிய மதத் தலைவரான குருநானக்கின் பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் சென்று வருவது வழக்கமாகும். யாத்ரீகர்கள் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் அந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் 9-ம் தேதி கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. அந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங் மீது தாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அவர் மரியாதைக்குரிய நபர் எனவும் புகாழரம் சூட்டியுள்ளார்.
சீக்கிய மக்களின் பிரதிநிதியாக மன்மோகன் சிங்கை தாங்கள் அழைக்க உள்ளதாகவும், முறைப்படி எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுப்போம் எனவும் குரைஷி கூறியிருக்கிறார். கர்தார்பூரில் நடைபெறும் குருநானக்கின் பிறந்தநாள் விழாவில் அனைத்து சீக்கியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே தமது விருப்பம் என பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே பாகிஸ்தான் அரசிடம் இருந்து அழைப்பு வந்தால் அதனை மன்மோகன் சிங் நிச்சயம் நிராகரித்து விடுவார் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் அமைச்சர் இப்படி பேசியுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவர் பிரதமராக இருந்த பத்தாண்டு காலத்தில் கூட பாகிஸ்தானுக்கு சென்றதில்லை என கூறியுள்ளனர்.