மொத்த இந்தியாவும் அமைதியா இருக்கு.. பாகிஸ்தான் மீடியாக்கள் மட்டும் ஏன் இப்படி?
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், நேற்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்ட நிலையில், இந்து, முஸ்லீம் தரப்பு இந்த தீர்ப்பை ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஏற்றுக் கொண்டது. எந்த பக்கத்திற்கும் வெற்றியும் இல்லை, எந்த தரப்புக்கும் தோல்வியும் இல்லை, அயோத்தியில், 2.77 ஏக்கர் தொடர்பாக நடந்த ஒரு சிவில் வழக்கு இது என்பதை பெரும்பாலான இந்துக்களும், முஸ்லீம்களும் உணர்ந்து வழக்கம்போல தங்கள் பணிகளில் மூழ்கியுள்ளனர்.
ஆனால், பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களோ, இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. இதுபற்றி பாக். ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி பார்க்கலாமா?
பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில செய்தித்தாள் 'டான்' இது குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அதில் கூறியுள்ளதை பாருங்கள்:
தலையங்கம்
"இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக அயோத்தியில் கோயில் கட்ட இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது" என்று டான் தலையங்க தலைப்பில் வாசகம் இடம் பெற்றுள்ளது. பாபர் மசூதியை இடித்தது, சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், கோயில் கட்ட அனுமதி அளிப்பதன் மூலம், கூட்டத்தை இடிப்பதற்கும் இது மறைமுகமாக ஆதரவளித்துள்ளது. சீக்கிய பக்தர்களுக்காக கர்த்தார்பூர் காரிடார் திறக்கப்பட்ட நாளில் இந்த தீர்ப்பு வந்தது என்பதும் சுவாரஸ்யமானது.
மத நல்லிணக்கம்
"நீதிமன்றம் எந்தவொரு தரப்பினருக்கும் சாதகமாக இல்லாதிருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஏனெனில் இந்த பிரச்சினை இந்தியாவில் மிகவும் சென்சிட்டிவானது. வகுப்புவாத நல்லிணக்கத்துடன் தொடர்புடையது." நம்பிக்கை மற்றும் மத விசுவாசம் போன்ற விஷயங்களில், அரசு ஒரு பக்கம் சாய்ந்து குடிமக்களுக்கும் நீதி வழங்கக்கூடாது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏன்? ஆவணங்கள், ஆதாரங்கள் இதோ
மதசார்பற்ற கொள்கை
1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் நேருவின் மதசார்பற்ற இந்திய கொள்கை முடிவுக்கு வந்தது என்றும், சங்க பரிவார் தேசிய அளவில் பிரபலமானது என்றும் கூறலாம் என்று டான் தலையங்கத்தில் எழுதியுள்ளது. இப்போது பாபர் மசூதியை இடித்தவர்களில் பலர், அதிகாரத்தின் இன்பத்தை அனுபவித்து வருகின்றனர். நிச்சயமாக, இந்த முடிவு தீவிர இந்துத்துவாவை ஊக்குவிக்கும், நவீன இந்தியாவில், சிறுபான்மையினரின் மத சுதந்திரத்திற்கு எதிராக, பெரும்பான்மையினரின் வன்முறை மன்னிக்கப்படுகிறது என்று ஒரு செய்தி முஸ்லிம்களிடையே பரவும் என்று டான் தலையங்கம் கூறியுள்ளது.
ஜனநாயக சிந்தனை
மேலும் டான் தனது தலையங்கத்தில், "இதன் மூலம், இந்தியா இனி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூற முடியாது." பாபர் மசூதி சம்பவத்திற்குப் பிறகு, நேரு மற்றும் காந்தியை விட்டு வெளியேறிய நாடு, இப்போது சாவர்க்கர் மற்றும் கோல்வல்கரின் சித்தாந்தத்திற்கு மாறிவிட்டது. இப்போது இந்திய மக்கள் ஜனநாயக சிந்தனையுடன் செல்வார்களா அல்லது சிறுபான்மையினரை, இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கும், இந்து தேசத்தை நோக்கி செல்வார்களா என்பதை தீர்மானிக்க வேண்டிய காலகட்டமாக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றம்
பாகிஸ்தான் செய்தித்தாள், 'தி நேஷன்' அயோத்தி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மிக முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர், ரெஹ்மான் மாலிக் எழுதிய ஒரு கட்டுரையை தி நேஷன் வெளியிட்டுள்ளது, அதில் அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு பக்கச் சார்பாக குறிப்பிட்டுள்ளார். "இஸ்லாமிய நாடுகள் அமைப்பு, இந்த விஷயத்தை, சர்வதேச நீதிமன்றத்தில் கிளப்ப நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஐ.நா. கூறக்கூடிய, மதங்களுக்கு இடையிலான நல்லெண்ண சாசனத்திற்கு எதிரானது இது. இந்த சாசனத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
நம்பிக்கை அடிப்படையா
பாகிஸ்தானின் செய்தி வலைத்தளமான இன்டர்நேஷனல் தி நியூஸ், கமல் பாரூக்கியை மேற்கோள் காட்டி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. "உச்ச நீதிமன்றம் வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கும் என்று நம்பினோம், ஆனால் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல." என்று கூறியதை சுட்டி காட்டியுள்ளது.
சீராய்வு இல்லை
உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் ஜாபர் அகமது பாரூக்கியின் அறிக்கையையும் இன்டர்நேஷனல் தி நியூஸ் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம், இந்த முடிவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யாது" என்று பாரூகி கூறியிருந்தார்.