தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் கட்டாயம் நிறுத்த வேண்டும் .. அமெரிக்க செனட்டர்
டெல்லி: தலிபான் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுக்கான ஆதரவு தருவதை பாகிஸ்தான் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்த ஒரு நாள் கழித்து அமெரிக்க பெண் எம்பி (செனட்டர்) மேகி ஹசன் இந்தியாவில் கூறினார்.
அமெரிக்க செனட்டர்கள் ஹசன் மற்றும் கிறிஸ் வான் ஹோலன் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அதிகாரிகளை நேற்று சந்தித்தனர்.
அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலும் நேற்று அமெரிக்க செனட்டர்கள் நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் செய்தனர். இது தொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், இந்தியா பாகிஸ்தான் இடையே டென்சன் அதிகரித்து வருவதால், இந்தியா காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த வேண்டும். அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கலந்துரையாடுவது முக்கியம்
இந்நிலையில் இன்று டெல்லி வந்த அவர்கள், இந்திய தலைவர்களை இன்று சந்திக்கிறார்கள். முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க செனட்டர் பெண் அதிகாரியான மேகி ஹாசன் கூறுகையில், "தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கும் தீவிரவாத சித்தாந்தம் பரவுவதைத் தடுப்பதற்கும் மேலும் என்ன செய்ய முடியும் என்று முக்கிய பாகிஸ்தான் தலைவர்களுடன் கலந்துரையாடுவது மிகவும் உதவியாக இருந்தது.
தலைவர்களுடன் பேச்சு
பாகிஸ்தானின் மூத்த தலைவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவது முக்கியமானதாக எங்களுக்கு இருந்தது. அவர்கள் தலிபான் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுக்கான ஆதரவு தருவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் .
மேம்படுத்த வேண்டும்
அத்துடன் காஷ்மீரில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இரு தரப்பிலும் நிலைமையை மேம்படுத்துவதற்கான உதவுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. எனவே இதற்காக பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்து நேற்று பேசினோம்" என்று கூறினார்.
இம்ரான் கான் குற்றச்சாட்டு
முன்னதாக ஜம்மு காஷ்மீர் குறித்து நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் "பிரதமர் மோடி காஷ்மீர் விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். தன்னிடம் இருந்த கடைசி சீட்டையும் எடுத்து விளையாடி விட்டார். ஆனால் காஷ்மீர் மக்கள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்கவில்லை என கூறியிருந்தார்.