சர்ச்சைக்குரிய சர் க்ரீக் பகுதியில் சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் வாலாட்டும் பாக்.
டெல்லி: அரபிக் கடலில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியாக சர் க்ரீக் பகுதியில் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்த உள்ளதால் இருநாடுகளிடையே புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.
அரபிக் கடலில் குட்டி பிராந்தியமான சர் க்ரீக் யாருக்கு சொந்தம் என்பதில் இந்தியா- பாகிஸ்தான் இடையே 70 ஆண்டுகளாக சர்ச்சை இருந்து வருகிறது. இப்பிராந்தியத்தின் நீர்பரப்பின் அடிப்படையில் வழக்கமாக கடற்படையில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்த இயலாது.
இதனால் அரபிக் கடல் பகுதியில் எம்ஜி110 என்ற இத்தாலிய தயாரிப்பு நீர்மூழ்கிக் கப்பல்களைத்தான் பாகிஸ்தான் இதுவரை பயன்படுத்தி வந்தது. தற்போது சர் க்ரீக் பகுதியில் உள்ள நீரில் மூழ்கி இருக்கும் வகையிலான சிறிய அளவிலான நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் உருவாக்கி உள்ளது.
துருக்கியில் உருவாக்கப்பட்ட இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தானின் கராச்சியின் கோமாரி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. துருக்கியிடம் இருந்து மொத்தம் 4 சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் பெற உள்ளது.
இத்தகைய நீர்மூழிக் கப்பல்களை எளிதில் கண்பிடித்துவிடவும் முடியாது என்கின்றன பாதுகாப்புத் துறை வட்டாரங்கள். அத்துடன் இந்த ரக நீர்மூழ்கிக் கப்பல்களுக்காகவே கேதி பந்தர் துறை முகத்தை சீரமைத்தும் வருகிறதாம் பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் இந்த புதிய ராணுவ நடவடிக்கையானது இருநாடுகளிடையேயான உறவில் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.