பாக். கிரே லிஸ்ட்டில் தொடரலாம்.. எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் முடிவு.. ஆனால் விரைவில் பிளாக் லிஸ்ட்!
தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) வெளியிட்ட லிஸ்டில் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே லிஸ்ட் நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
டெல்லி: தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) இன்று வெளியிட்ட லிஸ்டில் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே லிஸ்ட் நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானை கருப்பு லிஸ்டிற்கு மாற்றும் இந்தியாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
எஃப்ஏடிஎஃப் அமைப்பின் கிரே லிஸ்டில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் இருக்கிறது. பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப்ன் கருப்பு லிஸ்டில் சேர்க்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது ..சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (பினான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் - Financial Action Task Force - FATF) தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும்.
தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும். இதன் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகளை இது தரம் பிரிக்கும். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை எஃப்ஏடிஎஃப் பிளாக் லிஸ்ட் செய்வது வழக்கம். பொதுவாக இதன் கூட்டம் பாரிசில் நடக்கும்.
இதில் பாகிஸ்தான் கிரே லிஸ்டில் இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் கிரே லிஸ்ட் செய்தது. இதில் இருந்து பாகிஸ்தானை கருப்பு லிஸ்டில் மாற்ற இந்தியா முயன்று வருகிறது. இந்தியாவின் முயற்சிகள் இரண்டு முறை இதில் தோல்வி அடைந்தது. தற்போதும் பாகிஸ்தான் கிரே லிஸ்டில்தான் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவிலும் எஃப்ஏடிஎஃப் அமைப்பின் கிரே லிஸ்டில் பாகிஸ்தான் தொடரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தானை கருப்பு லிஸ்டில் மாற்ற முடியாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 39 நாடுகள் இந்த குழுவில் உள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, மலேசியா, துருக்கி வாக்களித்துள்ளது. 3 நாடுகள் இப்படி வாக்களித்த காரணத்தால், பாகிஸ்தானை கருப்பு லிஸ்டிற்கு மாற்ற முடியாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்த விசாரணை வரை பாகிஸ்தான் கிரே லிஸ்டில் தொடரும்.
ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பாகிஸ்தான் கிரே லிஸ்டில் ஏப்ரல் இறுதிவரை இருந்தால் தானாக கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஈரான் மட்டுமே இந்த கருப்பு லிஸ்டில் இருக்கிறது. இதனால் ஈரான் மீது பல பொருளாதார தடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாகிஸ்தானும் தடைகளை சந்திக்கும் நிலை வர வாய்ப்புள்ளது.
தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்தவில்லை. மும்பை தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதல்களை செய்த அமைப்புகளை பாகிஸ்தான் ஒடுக்கவில்லை என்று எஃப்ஏடிஎஃப் தெரிவித்துள்ளது. இதுதான் பாகிஸ்தானுக்கு ஏப்ரல் மாதத்தில் சிக்கலாக வாய்ப்புள்ளது.