லடாக்கில் பாக் துருப்புகள்.. பயங்கரவாதிகளுடன் கூட்டு.. இந்தியாவை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சீனா
டெல்லி: லடாக்கில் பாகிஸ்தான் துருப்புகளின் நடமாட்டம் இருப்பதாகவும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
லடாக் எல்லையில் சீனா, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. கடந்த மாதம் எல்லையில் அத்துமீறி நுழைந்ததில்லாமல் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்துவிட்டார்கள்.
பதிலுக்கு இந்தியாவும் தாக்குதல் நடத்தி 40 சீன வீரர்களை கொன்றது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கில்ஜித்- பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதே நேரம் ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டுவதற்காக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் சீன ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் வடக்கு லடாக் பகுதியில் சீன துருப்புகளுக்கு சரிசமமான எண்ணிக்கையில் 20 ஆயிரம் துருப்புகளை பாகிஸ்தான் குவித்துள்ளது. இந்தியா மீது பாய்வதற்கு சமயம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே இந்த அச்சுறுத்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய ராணுவம் மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகளின் தொடர் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளன.
பாகிஸ்தானை தூண்டும் சீனா
பாகிஸ்தான் உளவுத் துறையினரை சீனா தூண்டிவிடுகிறது. போரிடும் நோக்கில் பயங்கரவாதிகளை அதிகரிப்பது, இந்தியாவில் எல்லை செயல்பாட்டு குழுவினரை குவிக்கவும் திட்டமிட்டு வருகிறது. பாகிஸ்தானின் BAT எனப்படும் எல்லை செயல்பாட்டு குழுவினர்தான் எல்லை பிரச்சினைகளை கையாள்வர். இவர்கள் கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்வர். மிகவும் கொடூரமாக தாக்குதல் நடத்துவர்.
இந்திய பாதுகாப்பு படை
இது மட்டுமில்லாமல் காஷ்மீரில் பதற்றத்தை உருவாக்கவும் நாசவேலைகளை செய்யவும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் சீனா பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில காலங்களாக காஷ்மீரில் 120-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் கொன்றுள்ள போதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் உள்ளூர்வாசிகள் ஆவர்.
குளிர்காய்கிறது
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்தி இந்தியாவில் நாசவேலையில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடும் என தெரிகிறது. அதாவது பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து, இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. இந்திய- சீன பிரச்சினையை பயன்படுத்தி குளிர்காய நினைக்கிறது பாகிஸ்தான்.