கவலைப்படாதீங்க.. திரும்பவும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசத்தை நீட்டிச்சுட்டாங்க
டெல்லி: பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்து இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது.
ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.
அதேநேரம் ஒவ்வொரு மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை மத்திய அரசு பான்-ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து வந்தது.இந்நிலையில் பான்-ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) 2019 மார்ச் 31 என இருந்ததை செப்டம்பர் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் பான் உடன் ஆதாரை இணைக்கும் தேதியை நிர்ணயித்திருந்தது.
இதன்படி பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் பலரும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்தியநிதியமைச்சகம் நீட்டித்துள்ளது. இதன்படி வரும டிசம்பர் 31ம் தேதிக்குள் நீட்டிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே நிதி தொடர்பான முறைகேடு புகார்கள் இருக்காது என்பதால் அதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் பான் எண்ணை வைத்துள்ள கோடிக்கணக்கான மக்களின் நலன் கருதி அவ்வப்போது காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.
ஏனெனில் பான் கார்டு செயல்பாட்டில் இல்லை என்றால் ஒருவரால் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடமுடியாது. வங்கி கணக்கு உள்பட பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு அவசியம் என்கிற நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காததற்காக அவர்களின் பான் கார்டை ரத்து செய்தால் நிச்சயம் பலருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இதைகருத்தில் கொண்டே அவ்வப்போது காலநீட்டிப்பை அரசு வழங்கி வருகிறது.
எனினும் தற்போது வழங்கியுள்ள காலநீட்டிப்பான டிசம்பர் 31ம் தேதி 2019ம் ஆண்டுக்குள் பான் எண் உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் நிச்சயம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்களால் வங்கி மற்றும் நிதி சேவைகள் செய்ய முடியாமல் அவதிப்பட நேரிடலாம். எனவே பான் கார்டுடன் ஆதாரை அவர்களை இணைத்துவிடுவது நல்லது.