கொரோனாவுக்கு பலியான பெற்றோர்... 2 மாதத்தில் 645 குழந்தைகள் தவிப்பு - ஸ்மிருதி இரானி
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனாவுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பல லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் கொரோனாவுக்கு பெற்றோர்களை பறிகொடுத்து விட்டு 645 குழந்தைகள் தவித்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையில் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தினசரியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பலர் உயிரிழக்கின்றனர். இதில் குழந்தைகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. கொரோனாவால் பல மாநிலங்களில் பெற்றோர் இருவரையும் இழத்தல், தாய், தந்தை இருவரில் ஒருவரை இழத்தல் போன்ற பரிதாப நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர்.
கொரோனா வைரஸால் ஏற்கெனவே குழந்தைகளின் கல்விச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பச்சூழலும் வேதனைக்குரியதாக மாறி குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்குகிறது.
குழந்தைகளின் நிலையை உணர்ந்த ஏராளமான தன்னார்வ அமைப்புகள், மாநில அரசுகள் குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோரை இழந்துவிட்டால் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன.
இந்திய எல்லைக்கு மிக அருகில்.. சீன அதிபர் ஜின்பிங் திடீர் ஆய்வு.. என்ன காரணம்?.. பரபர பின்னணி!
குழந்தைகள் தவிப்பு
கடந்த ஏப்ரல் 1ஆம்தேதியில் இருந்து இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரேதசங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்து 645 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த குழந்தைகளை காப்பாற்றி, ஆதரவு அளிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பதில்
தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தாலும் முற்றிலும் ஒழிந்து விடவில்லை. தினசரியும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.
பெற்றோரை இழந்தவர்கள்
நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்மிரிதி இரானி, இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனாவுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் 158, ஆந்திராவில் 119, மகாராஷ்டிரத்தில் 83, மத்திய பிரதேசத்தில் 73 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
நிவாரணம் எவ்வளவு
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எங்கள் அமைச்சகத்தையும், கல்வி அமைச்சகத்தையும் கேட்டுள்ளன. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.