விருதும் வேணாம்.. ஒன்னும் வேணாம்... பத்ம விபூஷணை திருப்பியளிக்கும் முன்னாள் முதல்வர்!
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாககவும், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக கூறியும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை மத்திய அரசிடம் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 8வது நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 8வது நாளாக போராடி வருகின்றனர். மத்திய அரசு, விவசாய சங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த நிலையில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் யார்? நான் மக்கள். குறிப்பாக பொதுவான விவசாயி. இன்று நான் எனது மரியாதையை இழந்துவிட்டபோது, பத்ம விபூஷண் விருது கவுரவத்தை இன்னும் நான் தாங்கி பிடிப்பதில் அர்த்தம் இல்லை. மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருவதால் பத்ம விபூஷண் விருதை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறினார்.
கடந்த 2015 ல் பாதலுக்கு நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. பிரகாஷ் சிங் பாதலின் சிரோமணி அகாலி தளம் கட்சி முதலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது அக்கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.