காசிப்பூரிலுள்ள தடுப்புகள்.. பெர்லின் சுவர்களை போல உள்ளன.. காங்கிரஸ் எம்பி விமர்சனம்
டெல்லி: விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் காசிப்பூரிலுள்ள தடுப்புகள் பெர்லின் சுவர்களைப் போல உள்ளதாகக் காங்கிரஸ் எம்பி பிரதாப் சிங் பஜ்வா விமர்சித்துள்ளார்,
நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.
மறுபுறம் தலைநகரில் விவசாயிகள் போராட்டம் உச்சமடைந்துள்ளது. நேற்று போராடும் விவசாயிகளை நேரில் சந்திக்கக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் காசிப்பூர் சென்றனர். இருப்பினும், போராடும் விவசாயிகளைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை,
பின்வாசல் மூலம் அமல்
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் குறித்துப் பேசிய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பிரதாப் சிங் பஜ்வா, "விவசாய சட்டங்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டங்கள் குறித்து கருத்துக் கூறும் வாய்ப்புகூட எங்களுக்கு வழங்கப்படவில்லை. நாடே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்தபோது, மத்திய அரசு பின் வாசல் வழியாக விவசாய சட்டங்களை அமல்படுத்திவிட்டது" என்றும் அவர் விமர்சித்தார்.
பெர்லின் சுவர்கள்
நாடாளுமன்றத்தில் தனது தாய் மொழியான பஞ்சாபியில் பேசிய அவர், "விவசாயிகள் சொந்தமாகப் போராடி வருகின்றனர். அவர்கள் சொந்த கிரமங்களிலிருந்து நிதி சேர்க்கின்றனர். வங்கதேச போர் கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகள் உணவு அளித்தவர்கள் நாம்! ஆனால் இப்போது நமது விவசாயிகளுக்கே குடிநீர் வழங்க மறுக்கிறோம். காசிப்பூரிலுள்ள தடுப்புகள் பார்க்க பெர்லின் சுவரைப் போல உள்ளது. நாம்தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயகமா? இவை எல்லாம் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபாயாவில் நாம் கண்ட காட்சிகள்" என்றார்.
நரேந்திர மோடி
விவசாய சட்டங்களை 18 மாதம் நிறுத்தி வைக்கத் தயார் என்று கூறும் அரசு ஏன் சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்யக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த அரசியல்வாதியாக மாறுவதற்கான வாய்ப்பு இது என்று குறிப்பிட்ட அவர், எல்லைகளில் போராடும் விவசாயிகளைச் சந்தித்து, சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், குடியரசு தின டிராக்டர் பேரணியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச ஆதரவு
இச்சட்டங்கள் குறித்துப் பேசிய அகாலி தளத்தைச் சேர்ந்த சர்தார் சுக்தேவ் சிங் திண்ட்சா எம்பி, "இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போதே இது விவசாயிகளின் நலனிற்கு எதிராகவுள்ளதாகக் கூறி நான் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். விவசாயிகளின் போராட்டத்திற்குத் தேச அளவிலும், ஏன் சர்வதேச அளவிலும்கூட ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால், பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே இச்சட்டங்களுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறுகின்றனர்.
காலிஸ்தான் ஆதரவாளர்கள்
ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு, தானியங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய முயன்றபோது, நமக்கு தேவையான உணவை உற்பத்தி செய்தவர்கள் பஞ்சாபிகள். நாட்டின் விடுதலைக்கு முன் நின்று போராடியவர்கள் நாங்கள், ஆனால் இப்போது காலிஸ்தானியர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். ஒட்டு மொத்த எதிர்க்கட்சியும் விவசாய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்க மத்திய அரசு மறுக்கிறது" என்று அவர் பேசினார்.