நகர கூட்டுறவு வங்கி ஆர்பிஐ கீழ் வருகிறது...வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா நிறைவேறியது!!
டெல்லி: வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா 2020 ராஜ்ய சபாவில் நிறைவேறியது. லோக் சபாவில் ஏற்கனவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. டெபாசிட்தாரர்களை பாதுகாக்கவும், கூட்டுறவு வங்கிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும் இந்த மசோதாவை கொண்டு வந்து இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.
இந்த புதிய மசோதாவின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்படும். இந்த வங்கிகளின் செயல்பாடுகள் நாட்டில் சீர்கெட்டு இருப்பதாகவும், இதை நடைமுறைப்படுத்தும் வகையில் 1949 ஆம் ஆண்டின் வங்கிகள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வங்கிகளில் பணம் வாங்கி ரூ. 1400 கோடி மோசடி...சிபிஐ 4 மாநிலங்களில் ரெய்டு!!
டெபாசிட்தாரர்கள்
இதுகுறித்து நேற்று லோக் சபாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிகளின் டெபாசிட்தாரர்கள் மற்றும் சிறு வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கி டெபாசிட்தாரர்களை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வந்து இருக்கிறோம்'' என்று தெரிவித்து இருந்தார்.
ரிசர்வ் வங்கி
ஏற்கனவே நாட்டில் இருக்கும் 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 58 பல்வேறு மாநிலங்களின் கூட்டுறவு நடவடிக்கைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனென்ன திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.
கடன்
- வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கு இந்த மசோதா உதவுகிறது.
- ஒரு வங்கியின் மீது ரிசர்வ் வங்கி தடை விதிக்கும்போது கடன் கொடுக்கக் கூடாது, முதலீடு செய்யக் கூடாது.
ஈகுவிட்டி
- கூட்டுறவு வங்கிகள் தங்களது எல்லைக்கு உட்பட்டவர்களுக்கு முக மதிப்பில் பங்குகளை விற்பது, ஈகுவிட்டி வழங்குவது, பிரிமியம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
ஒப்புதல்
- மேலும் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு கடன் பத்திரங்களை வங்கிகள் வழங்கலாம். இதற்கு கண்டிப்பாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
- கூட்டுறவு வங்கிகள் வழங்கிய பங்குகளை சரண்டர் செய்து பணம் பெற முடியாது.
இயக்குநர்கள்
- வேலை வாய்ப்புகள் வழங்குவது, இயக்குநர்கள் நியமிப்பது, தலைவரை தேர்வு செய்து போன்றவற்றை தன்னிச்சையாக கூட்டுறவு வங்கிகள் செய்து கொள்ளலாம். இவற்றில் ரிசர்வ் வங்கி தலையிடாது.
- மாநில சட்டங்களின் கீழ் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர்களின் அதிகாரங்களை பாதிக்காது
கூட்டுறவு வங்கி
இதுபோன்ற பல்வேறு அம்சங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்போது லோக் சபா மற்றும் ராஜ்ய சபா இரண்டிலும் நிறைவேறியுள்ளது. இந்த புதிய மசோதாவின்படி கிராமப்புறங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் வராது.