விவசாய சட்டங்களில் என்ன தவறு? ஒரு மாநிலத்தில் மட்டுமே போராட்டம்... அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
டெல்லி: விவசாய சட்டங்களில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டம் ஒரு மாநிலத்தில் மட்டுமே நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று, காசிப்பூர் சென்ற எதிர்க்கட்சி எம்பிகள், விவசாயிகளைச் சந்திக்க முயன்றனர். இருப்பினும், போராடும் விவசாயிகளைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், பல்வேறு எதிர்க்கட்சி எம்பிகளும் விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசினர். காசிப்பூரிலுள்ள தடுப்புகள் பெர்லின் சுவர்களைப் போல உள்ளதாகக் காங்கிரஸ் எம்பி பிரதாப் சிங் பஜ்வா விமர்சித்தார்.
என்ன தவறு
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரம் இந்த மூன்று விவசாய சட்டங்களில் என்ன தவறாக உள்ளது. அதை அவர்கள் குறிப்பிட்டால், அது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தலாம். விவசாய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. இதற்காக தற்போதுள்ள விவசாய சட்டங்களில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம் இல்லை.
ஒரு மாநிலத்தில் மட்டும் போராட்டம்
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகிறது, அவர்களுக்கு விவசாய சட்டங்கள் குறித்து தவறாகக் கூறப்பட்டுள்ளது. எங்கள் ஒப்பந்த விவசாய சட்டத்தால் விவசாயிகள் நிலங்கள் யாரிடமிருந்தும் பறிக்கப்படாது. விவசாயிகள் மிகவும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், ஜிடிபி-இல் விவசாயத்தின் பங்களிப்பை அதிகமாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த இலக்கைகளை அடைய விவசாய சட்டங்கள் முக்கியம்" என்றார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை
அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துப் பேசிய அவர், "தற்போது உற்பத்தி செலவைவிடக் கூடுதலாக 50% தொகை குறைந்தபட்ச ஆதரவு விலையாக அறிவிக்கப்படுகிறது. ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் விவசாய உள்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய துறையில் முதலீடுகளை அதிகப்படுத்த முயன்று வருகிறோம்" என்றார்
10 கோடி பேருக்கு வேலை
மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டம் குறித்துப் பேசிய அவர், "இத்திட்டத்தைத் தொடங்கியது நீங்கள் தான். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இவை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. எங்கள் அரசு தான் இதை முன்னோக்கி எடுத்துச் சென்றது. இத்திட்டத்தின் செயல்திறனை அதிகரித்தோம். கொரோனா காலத்தில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை 61 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 1.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தினோம். இதன் மூலம் 10 கோடி பேருக்கு வேலை கிடைத்தது" என்றார்.