மக்களவையில் தாக்கலான ஜாலியன் வாலாபாக் நினைவிட சட்ட திருத்த மசோதா.. திமுக கடும் எதிர்ப்பு
டெல்லி: ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கான அறங்காவலர் குழுவிலிருந்து காங்கிரஸ் தலைவரை நீக்க வழிவகுக்கும் சட்டத்திருத்தத்திற்கு, திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1952-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நினைவிட சட்டத்தில் திருத்தம் செய்ய கோரும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய திமுக-வை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது என குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் வரலாற்றை மாற்றுமிடமாக அல்லாமல் வரலாற்றை படைக்கும் இடமாக திகழ வேண்டும் என்றார். நூறாண்டுகளுக்கு பிறகு வரலாற்றை மாற்றியமைக்க விரும்புகிறீர்களா என்று வினவிய அவர், என்ன முயற்சி இது என்றார். பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வந்து நம்மை சுமார் 300 வருடம் ஆட்சி செய்தனர் என்பது வரலாற்று உண்மை, அதை நம்மால் மாற்ற இயலாது.
தற்போதைய நிலையில் நாட்டை கட்டுமானம் செய்யும் பணியை மட்டுமே நாம் செய்ய வேண்டும். ஆனால் நாம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம். இது மிகவும் வெட்ககேடான செயல் என குறிப்பிட்டார்.
நம் நாட்டை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக்க பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். ஆனால் இது தான் அதற்கான வழியா என சரமாரியாக கேள்வி எழுப்பினார் தயாநிதி மாறன்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் நம்மை பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வலிமையான செய்தியை நாம் அளிக்க வேண்டும் என்றார். விடுதலைக்கு முன்னர் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸில் தான், மக்கள் அனைவரும் இருந்ததாக வரலாறு கற்பிக்கிறது என்று அவர் கூறிய போது மக்களவையில் சலசலப்பு எழுந்தது.
மிசாவில் காங்கிரஸால் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட தயாநிதி மாறன், அதற்காக கடந்த காலத்தை நினைக்காமல் நாட்டின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.