நாடாளுமன்றத்தில் இன்று: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!
டெல்லி: நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் இன்று மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையிலான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
12 ராஜ்யசபா எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி கடந்த 6 நாட்களாக ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள் எதிர்க்கட்சியினர். இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினமும் நாகாலாந்து துப்பாக்கிச் சூடு குறித்தும், போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கான இழப்பீடு, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் எழுப்பின.
பரபரப்பான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்
முன்னதாக பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி , குளிர் கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாத எம்பிக்களை கண்டித்தார். ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சுட்டிக் காட்டினால் குழந்தைகள் கூட விரும்ப மாட்டார்கள். எனவே எம்பிக்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
மக்களவையில் நேற்றைய தினம் பேசிய எம்பி ராகுல் காந்தி, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய போது இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இறந்த விவசாயிகள் குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் இல்லாததால் அதை மக்களவையில் தான் தாக்கல் செய்வதாக அறிவித்தார்.
லோக்சபா
பேரிடர் காலங்களில் அணைகளை பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட அணையை கண்காணித்து ஆய்வு செய்து, பராமரிப்பது தொடர்பாக ராஜ்யசபாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை லோக்சபாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று தாக்கல் செய்கிறார். இது ஊழல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அனுமதி வழங்குகிறது.
அது போல் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய சட்டம் 2003 இல் திருத்தம் மேற்கொள்ளும் வகையிலான மசோதாவையும் அவர் இன்று தாக்கல் செய்கிறார். மேலும் டெல்லி சிறப்பு காவல் திருத்த மசோதாவையும் தாக்கல் செய்கிறார்.
பருவ நிலை மாற்றம் குறித்து எம்பிக்கள் கனிமொழியும் என் கே பிரேம சந்திரனும் கேள்வி எழுப்புவார்கள் என தெரிகிறது.
ராஜ்யசபா
செயற்கை முறை கருத்தரித்தல் ஒழுங்கு முறை மசோதா, வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்கிறார். அத்துடன் தேசிய வாடகைத் தாய் ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கிறார்.