பாராளுமன்ற கூட்டத்தொடர்.. 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
டெல்லி: 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளே விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
அடுத்த வருடம் உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மக்களை கவரும் வகையில் பல முக்கிய மசோதாக்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டத்தொடர்
இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 23ம் தேதி வரை நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பல காலமாக மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட டேட்டா பாதுகாப்பு மசோதா தொடங்கி விவசாய சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்யும் ஒற்றை மசோதாவும் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
வேளாண் சட்டம்
அதேபோல் குளிர்கால கூட்டத்தொடரில் இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை கட்டுப்படுத்தும் மசோதா ( The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021,) கொண்டு வரப்பட உள்ளது. அதே சமயம் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விற்பனை விலை தொடர்பான சட்டமும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
கிரிப்டோ கரன்சிகள்
இந்த மசோதா மூலம் பல்வேறு தனியார் கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்படவும், சில கரன்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் உள்ளது. அதோடு ஆர்பிஐ மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் கரன்சி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தற்கான அடிப்படை திட்டத்தை வகுக்கும் வகையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?
மக்களவை: இன்று மக்களவையில் பிரதிபா சிங் மற்றும் கியானேஸ்வர் பாட்டில் ஆகிய இரண்டு பேரும் எம்பிக்களாக உறுதிமொழி ஏற்றனர். காலை 11 மணிக்கு அவை தொடங்கியது. மறைந்த எம்பிக்கள் செங்குட்டுவன், கல்யாண் சிங், ஆஸ்கார் பெர்னாண்டஸ், கோடில் பிரசாத் அனுராகி, ஷியாம் சுந்தர் சோமானி, ராஜ்நாராயண் புதோலியா, தேவ்வ்ரத் சிங் மற்றும் ஹரி தன்வே பண்ட்லிக் ஆகியோருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.
ரத்து
முதல் நாளே விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. விவசாய சட்டங்களை ரத்து செய்யும் முன் அதை பற்றி பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. நாடாளுமன்ற விவாதங்களில் இருந்து தப்பி ஓடுகிறார் பிரதமர் மோடி. அவர் அவையில் எதுவும் பேசவில்லை.
பேசவில்லை
பெகாஸஸ் குறித்தும் பிரதமர் மோடி இதுவரை எதுவும் பேசவில்லை. அவர் சொல்வதை எல்லாம் கேட்க இது மான் கி பாத் கிடையாது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி ஏற்கனவே மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். இதனால் அதை பற்றி அவையில் விவாதிக்க வேண்டியது இல்லை என்று ஆளும் தரப்பு வாதம் வைத்தது. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக இரண்டு அவையும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 12 மணிக்கு மீண்டும் அவை தொடங்கியது.
மசோதா
இந்த நிலையில் இன்று மீண்டும் அவை கூடிய நிலையில் 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை லோக்சபாவில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா லோக்சபாவில் விவாதமின்றி நிறைவேறியது.
மாநிலங்களவை:
இதையடுத்து குழந்தை பிறப்பு தொழில்நுட்பம், பாதுகாப்பு, நடவடிக்கைகள் தொடர்பான மசோதா ஒன்றை இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தாக்கல் செய்வார். ஆஸ்கார் பெர்னாண்டஸ், கே பி ஷானப்பா, டாக்டர். சந்தன் மித்ரா ஹரி சிங் நல்வா, மோனிகா தாஸ் மற்றும் அபானி ராய் ஆகிய எம்பிக்களுக்கு இன்று மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்படும். அணை பாதுகாப்பு 2019 மசோதாவை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மாநிலங்களையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தாக்கல் செய்வார்.