நாடாளுமன்றத்தில் இன்று: தேசிய வாடகைத் தாய் வாரியம் உருவாக்கம் குறித்து ராஜ்யசபாவில் ஆலோசனை
டெல்லி: நாகாலாந்தில் அப்பாவி மக்கள் 16 பேர் துணை ராணுவத்தால் கொல்லப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் இன்றைய தினம் ராஜ்யசபாவில் தேசிய வாடகைத் தாய் வாரியம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. இந்த நிலையில் கடந்த மழைக் கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக இந்த குளிர்கால கூட்டத் தொடர் முழுவதிலும் இருந்து 12 ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினரும் 12 எம்பிக்களும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்ட அவை சனி, ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு நேற்று கூடியது.
அப்போது நாகாலாந்தில் பழங்குடியினர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் ஏற்கெனவே செயற்கை கருத்தரித்தல் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்தார்.
அது போல் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு மசோதாக்களும் நேற்றைய தினம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என பட்டியலிடப்பட்டு பின்னர் அமளியால் அவை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து அந்த மசோதாக்கள் இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள் சட்டம் 1958 இல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்கிறார்.
ராஜ்யசபா
செயற்கை முறை கருத்தரித்தல் ஒழுங்கு முறை மசோதா, வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்கிறார். அத்துடன் தேசிய வாடகைத் தாய் ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கிறார்.