பரபரப்பான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. இன்று சில முக்கிய மசோதாக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றன.
12 ராஜ்ய சபா எம்பிக்கள் கடந்த கூட்டத்தொடரில் நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர்களை மீண்டும் அவையில் சேர்ப்பேன என்று ராஜ்யசபா சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துவிட்டார்.
ஆனால் இவர்களை அவையில் சேர்க்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று கூறி எதிர்க்கட்சிகள் இரண்டு அவையிலும் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனால் பாராளுமன்றம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று அமளிக்கு பின் அணை பாதுகாப்பு மசோதா மிக நீண்ட விவாதத்துக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ராஜ்யசபாவில் இன்று நிறைவேற்றப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக அமளி காரணமாக இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேறி உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழ்நாட்டின் உரிமை பறிக்கப்படும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று திமுக கோரிக்கைவைத்தது குறிப்பிடத்தக்கது. தீவிர வாதங்களுக்கு பின்பாக திமுக எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று சில முக்கிய மசோதாக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
லோக்சபா:
அதன்படி லோக்சபாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் மருத்துவர் ஜித்தேந்தர் சிங், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் சட்டம் 2003ல் மாற்றம் கொண்டு வரும் சட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார். டெல்லி சிறப்பு போலீஸ் சட்டம், 1946ல் மாற்றங்களை கொண்டு வரும் வகையிலும் இன்று அவர் மசோதாக தாக்கல் செய்ய உள்ளார்.
அதேபோல் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சட்டம், 1998ல் மாற்றம் கொண்டு வரும் மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா தாக்கல் செய்ய உள்ளார்.
மேலும் பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை கட்டாயமாக்கும் வகையில் பாஜக எம்பி ரமேஷ் பித்தூரி முக்கிய கோரிக்கை ஒன்றை இன்று அவையில் வைக்க இருக்கிறார்.
ராஜ்ய சபா:
இன்னொரு பக்கம் ராஜ்ய சபாவில் கொரோனா கேஸ்கள் குறித்த ரிப்போர்ட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மேலும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறி மதிமுக எம்பி வைகோ தனி நபர் மசோதா தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தனி நபர் மசோதாக்கள் ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.