தொடங்கியது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. காத்திருக்கும் மசோதாக்கள்.. பெரும் எதிர்பார்ப்பு
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
Recommended Video
டெல்லி: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. பல்வேறு மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றில் இருந்து டிசம்பர் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பல முக்கிய சட்டங்கள், திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த லோக்சபா கூட்டத்தொடரில் காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கியது, முத்தலாக் சட்டம், மோட்டார் வாகன சட்டம் என்று முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
அதேபோல் இப்போதும் அதிரடி சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் 30 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தம் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக பல மாதங்களாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு வந்தது. இந்த முறை பெரும்பாலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். அதேபோல் பொது சிவில் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.
மேலும் ரபேல் வழக்கில் பாஜகவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது குறித்தும் முக்கிய விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அயோத்தி வழக்கு குறித்தும், ராமர் கோவில் கட்டுவது குறித்தும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இந்த முறை 20 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடராகும்.மிக முக்கியமாக வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் எம்பி.,யாக பதவி ஏற்று இருக்கிறார்.
இந்த தொடரில், எதிர்க்கட்சியில் விலைவாசி உயர்வு, டெல்லி புகை பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சீர்கேடு ஆகியவை குறித்து பிரச்சனை எழுப்பும் என்று கூறுகிறார்கள். அதேபோல் மிக முக்கியமாக எம்பி பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் காஷ்மீரில் வீட்டு சிறையில் இருப்பது தொடர்பாகவும் இதில் விவாதம் செய்ய உள்ளனர்.