அமளி துமளிகளுக்கு இடையே... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... இன்றுடன் நிறைவடைகிறதா?
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இன்றுடன் ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக ராஜ்ய சபாவில், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஜூலை மாதம் துவங்க இருந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடத்துவதற்கு முடிவு செய்தனர்.
பாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு!
கொரோனா
இதன்படி, கடந்த, 14ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. வார விடுமுறை இல்லாமல் தொடர்ச்சியாக, கூட்டத் தொடர் நடந்தது. முதல் நாளில் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த 25க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அவைக்கு வரும் எம்பிக்கள், அமைச்சர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருந்தன.
மோடி
இந்தக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே முக்கிய மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதன்படி, வேளாண் மசோதா, வங்கி சட்ட திருத்த மசோதா, தொழிலாளர் சட்ட திருத்த மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள் உறுப்பினர்களின் பயங்கர அமளிகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. நேற்று மட்டும் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓம் பிர்லா
இந்த நிலையில் கொரோனா தொற்று ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி அவையை விரைவில் முடித்துக் கொள்ள லோக்சபா உயர்மட்ட அலுவல் கூட்டத்தை கூட்டி, சபாநாயகர் ஓம் பிர்லா விவாதித்து இருந்தார்.
ஒத்திவைப்பு
இதையடுத்து, ராஜ்யசபாவில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கூறுகையில், ''நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க பரிந்துரை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள், ராஜ்ய சபாவிலும் நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.
இன்று மாலை
லோக் சபாவில் நேற்று எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. நேற்று முழுவதும் புறக்கணித்து வந்தனர். எம்பிக்கள் எட்டு பேர் இந்த தொடர் முழுவதும் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, லோக் சபாவில் இருந்து வெளிநடப்பு செய்து இருந்தனர். இதனால், இன்று மாலை 6 மணிக்கு லோக் சபா நடவடிக்கைகள் துவங்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.