வந்தே பாரத் ரயிலே நொந்து போய் கிடக்கு.. இதுதான்யா நம்ம பய புத்திங்கிறது.. பாருங்க போட்டோவை
வந்தே பாரத் ரயிலுக்குள் பயணிகள் குப்பைகளை அப்படியே வீசி சென்றதால் ரயில் பெட்டி குப்பை கூடம் போல காட்சி அளிக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
டெல்லி: இந்தியாவின் அதி நவீன சொகுசு ரயிலான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் குப்பைகளை அப்படியே வீசி விட்டு சென்றதால் ரயில் பெட்டிகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தாலும் அதை நம் மக்கள் உரிய முறையில் பயன்படுத்துவதில்லை என்று நெட்டிசன்கள் பலரும் ஆதங்கத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.
இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக ரயில்வே துறையே உள்ளது. பாதுகாப்பு, சரியான நேரத்திற்கு சென்று விட முடியும்.
மலிவான கட்டணம் என பல்வேறு வசதிகள் இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புவதுண்டு. வசதி படைத்தவர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை ரயில் பயணத்தை அனைத்து தரப்பு மக்களும் நாடுகின்றனர்.
'மிஷன் சவுத்'.. தென்னிந்தியாவுக்கு மேலும் 3 வந்தே பாரத்.. எங்கெங்கு தெரியுமா? சூப்பர் அறிவிப்பு!
வந்தே பாரத் ரயில்
பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வேயை நவீனமயமாயக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி சதாப்தி உள்ளிட்ட சொகுசு ரயில்கள் ஏற்கனவே இயக்கபப்ட்டு வரும் நிலையில், அதி நவீன வசதிகள் மற்றும் வேகத்துடன் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை மத்திய அரசு அறிமுகபப்டுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா, குஜராத் மாநிலம் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை, விசாகப்பட்டினம் - செகந்திராபாத் உள்பட 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயிலின் வெளிப்புற தோற்றம்
வந்தே பாரத் ரயில் முழுவது ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், வைபை என சொகுசு வசதிகள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால், இந்த ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் பலரோ ரயிலில் பயணிக்கிறமோ.. இல்லையோ ஒரு ஒரு செல்பியாவது எடுத்து விட வேண்டும் என்று ஆசைப்படும் பயணிகளும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு வந்தே பாரத் ரயிலின் வெளிப்புற தோற்றமும் அமைந்து இருப்பதை பயணிகளுக்கு இந்த ரயில் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
அசுத்தப்படுத்திய பயணிகள்
சமீபத்தில் கூட விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்ற வந்தே பாரத் ரயிலுக்குள் செல்பி எடுக்கும் ஆசையில் ஒருவர் சிக்கி பின்னர் 6000 ரூபாய் அபாரதம் செலுத்தி விட்டு வந்த செய்தியை கூட பார்த்து இருப்போம். வந்தே பாரத் ரயில் மீது பயணிகள் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு இருந்தது. பயணிகளின் ஆர்வம் ஒருபக்கம் இப்படி இருக்கிறது என்றால் எவ்வளவு சொகுசு வசதிகளுடன் கூடிய ரயிலாக இருந்தாலும் நம்ம ஊர்மக்கள் அதை அசுத்தப்படுத்தாமல் விடுவதில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும் ஒரு நிகழ்வு வந்தே பாரத் ரயிலில் நடைபெற்றுள்ளது.
குப்பைகளான ரயில் பெட்டிகள்
பயணிகள் ரயில் பயணத்தின் போது தங்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திவிட்டு அப்படியே வீசி சென்றுள்ளது.. இந்தக் குப்பைகள் ரயிலின் பெட்டிக்குள் சிதறிக்கிடக்கும் காட்சிகளும் இணையத்தில் பரவி வருகின்றன. காலி தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்த காலி டப்பாக்களும் ரயில் பெட்டிக்குள் சிதற்கிடக்கின்றன. ஐ.ஏ.எஸ் அதிகாரி அவானிஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை பகிர்ந்துள்ளார். வீ தி பியூப்பிள் (நாம் மக்கள்) என்ற கேப்ஷனுடன் ரயில் பெட்டிக்குள் குப்பைகள் சிதறிக்கிடக்கும் காட்சிகளும் அதை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர் ஈடுபட்டு இருப்பதும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
நெட்டிசன்கள் கண்டனம்
இந்த பதிவிற்கு கீழே நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "நமது நாட்டில் மக்களுக்கு அவர்களின் கடைமைகள் தெரிவது இல்லை. ஆனால் உரிமைகளை நிச்சயமாக தெரிந்து வைத்திருப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "சிறந்த வசதிகளை எதிர்பார்க்கும் நம் மக்களுக்கு அதை எப்படி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவது இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.