கொரோனாவுக்கு மருந்து என்று சொல்லிக்கொண்டு வராதீர்கள்.. பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு ஆயுஷ் குட்டு
டெல்லி: வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் பிற மல்டி வைட்டமின் மாத்திரைகள் போன்றுதான் கொரோனா சிகிச்சையில், பதஞ்சலியின் கொரோனில் மருந்தை சந்தைப்படுத்த முடியுமே தவிர, கொரோனா மருந்து என்று கூறி சந்தைப்படுத்த முடியாது என்று உத்தரகண்ட் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம், கடந்த வெள்ளிக்கிழமை தனது கொரோனில் மாத்திரையை மீண்டும் சந்தைப்படுத்தியது.
இந்த மருந்து முன்பு "நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்" ஆக அங்கீகரிக்கப்பட்டது. அதை கொரோனாவுக்கான மருந்து என்பதை போல பதஞ்சலி இப்போது அறிவித்துள்ளது.
அடிப்படை மருந்தாம்
இந்த நிலையில் உத்தரகண்ட் மாநில உரிம உரிம அதிகாரசபையின் (எஸ்.எல்.ஏ) இயக்குனர் ராவத், கூறுகையில், "துணை சிகிச்சை மருந்து என வகைப்படுத்தப்பட்ட ஒரு மருந்து, எந்தவொரு சிகிச்சையிலும் தனியாக பயன்படுத்த முடியாது" என்றார்.
விட்டமின்தான்
"அதேநேரம், வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் மல்டி வைட்டமின் மருந்துகள் போன்ற ஒட்டுமொத்த சிகிச்சை முறைக்கு ஒரு துணை மருந்தாக இது வழங்கப்படலாம். ஆனால் கொரோனில் ஒரு முதன்மை மருந்தாக பயன்படுத்த முடியாது, "என்றார்.
மருந்து என்று சொல்லாதீர்கள்
பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவன தலைமையிடமாக உத்தரகண்ட் மாநில நகரமான ஹரித்வாரில் இருப்பதால் ராவத்தின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. கோவிட் -19 க்கு கொரோனில் ஒரு "சிகிச்சை மருந்து" என்று கூறி விற்பனை செய்ய கூடாது என்று நிறுவனத்திற்கு "கண்டிப்பாக" உத்தரவிட்டுள்ளளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மருத்துவ சங்கம்
கொரோனாவை, கொரோனில் குணப்படுத்தும் என்று தெரிவிப்பது, நாட்டு மக்களை ஏமாற்றுவது போலத்தான் என்று இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ராம்தேவ்வின் மருந்து அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கும் அந்த அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.