விற்பனைக்கு வரும் பதஞ்சலி மருந்து.. 7 நாட்களில் கொரோனாவுக்கு 100% தீர்வு.. அடம் பிடிக்கும் ராம்தேவ்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தக்கூடிய மருந்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக மறுபடியும் தெரிவித்துள்ளார் யோகா குரு ராம்தேவ். விற்பனைக்கு அது வர உள்ளதாம்.
பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய ராம்தேவ், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய Coronil மருந்தை தாங்கள் கண்டுபிடித்ததாக, அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால், மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த மருந்தை கொரோன வைரஸை குணப்படுத்த புதிய மருந்து என்று, பதஞ்சலி பதிவு செய்யவில்லை என்று தெரிவித்து, அவ்வாறு கூறி விளம்பரப்படுத்த கூடாது என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராம்தேவ். அவர் கூறுகையில், ஆயுஸ் அமைச்சகத்திடம் அனைத்து வகை விளக்கங்களையும் கொடுத்துள்ளோம். Coronil உட்பட எங்களது மூன்று வகை புதிய மருந்துகளும் இனிமேல் சந்தையில் கிடைக்கும். இந்த மருந்தில் எந்த ஒரு உலோகமும் கிடையாது.
கர்நாடகாவில் பகீர்- 47 ஆடுகளுக்கு கொரோனாவா?- தனிமைப்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி
ஆயுஷ் அமைச்சகம் அறிவுரை
ஹெபடைடிஸ் மற்றும் ஆஸ்துமா நோய்களை ஆயுர்வேத மருந்துகளால் குணப்படுத்தி உள்ளோம். எங்களது மருந்துக்கு கோவிட் மேலாண்மை என்று பெயர் சூட்டலாமே தவிர கோவிட் சிகிச்சை என்று பெயர் சூட்டக் கூடாது என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. யோகா மூலமாக ரத்த அழுத்தத்தை சரி செய்ய முடியும் என்று நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆனால் நவீன அறிவியல் உலகில் ரத்த அழுத்தம் என்பது குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்று தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆயுர்வேதம்
நாங்கள் கொரோனா நோய் பாதிப்பை குணப்படுத்துவதற்கான இந்த மருந்து தொடர்பான ஆய்வு கட்டுரையை சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளோம். இந்த ஆய்வுகளை மேலும் நீண்ட காலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குவோம். ஆயுர்வேதம் மூலமாக பல்வேறு நோய்களை குணப்படுத்துவது தொடர்பாக எங்களிடம் 500 விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குணமடைந்த நோயாளிகள்
மருந்து தயாரிக்கும் போது அனைத்து வகையான நெறிமுறைகளையும் பின்பற்றுகிறோம். இந்த நெறிமுறைகள் ராம்தேவ் அல்லது பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டது கிடையாது. இப்போது உள்ள நவீன அறிவியல் உலகம் கூறக்கூடிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு தான் நாங்கள் மருந்து தயாரிக்கிறோம். எங்கள் ஆய்வு மையத்தில் 45 கொரோனா நோயாளிகளுக்கு கொரோனில் மருந்து கொடுத்து பரிசோதித்தோம். 69% நோயாளிகள் மூன்று நாட்களில் முழுமையாக குணம் அடைந்தனர். மற்றவர்கள் 7 நாட்களில் முழு குணம் அடைந்தனர். எனவே பதஞ்சலி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமர்சனம்
என் மீதோ அல்லது பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீதோ உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால் விமர்சனம் செய்யுங்கள். ஆனால், கொரோனா வைரஸ், நீரழிவு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது இரக்கம் காட்டுங்கள். இவ்வாறு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.