60 வயதுக்கு மேற்பட்ட கொரோனா பாதித்த முதியோருக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் கிடையாது- புது விதிமுறை
டெல்லி: கொரோனா பாதித்தவர்களுக்கான வீட்டு தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாற்றம் செய்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நோயாளிகளுக்கு வீட்டு தனிமைப் படுத்துதல் கூடாது என்று புதிய விதிமுறை கூறுகிறது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், அதிலும் குறிப்பாக இணை நோய்களான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல், கல்லீரல் பிரச்சினைகள், கிட்னி பிரச்சினை போன்றவை உள்ள முதியவர்கள் என்றால் மருத்துவ அதிகாரி உரிய பரிசோதனைகள் செய்த பிறகுதான் வீட்டில் தனிமை படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அல்லது அவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் கிடையாது.
வீட்டு தனிமைப்படுத்தல் இருக்கக்கூடிய கொரோனா பாதித்தவர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காய்ச்சல் வரவில்லை என்றாலும், அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும், அவர்கள் பத்து நாட்கள் கழித்து குணமடைந்ததாக அறிவிக்கப்படுவார்கள்.
வீட்டு தனிமையில் இருப்பவர்கள் தங்களது உடல் நிலையை தாங்களே தினமும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டு தனிமைப்படுத்துதல் முடிவடைந்த பிறகு மறுபடியும் பரிசோதனையும் மேற்கொள்ளத் தேவை கிடையாது. அறிகுறி இல்லை என்றால் அவர்கள் குணம் அடைந்தவர்களாக கருதப்படுவார்கள்.
வீட்டில் உள்ள பிறருக்கு நோயை பரப்புவதற்கு வாய்ப்பு கிடையாது. தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதற்குப் போதிய இட வசதி இருக்கிறது என்று கூறக்கூடிய லேசான அறிகுறி கொண்ட கொரோனா பாதித்த நோயாளிகள் வீட்டு தனிமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
உலகின் முதலாவது கொரோனாவுக்கான தடுப்பூசியை ஆகஸ்ட் 15-ல் அறிமுகம் செய்ய ஐ.சி.எம்.ஆர். திட்டம்
24 மணி நேரமும் எப்போது தேவைப்பட்டாலும் உதவி செய்வதற்கான நபர் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். மருத்துவமனை மற்றும் உதவி செய்வோர் ஆகிய இருவரையும் தொடர்பு கொள்ள கூடிய வசதியும், வீட்டு தனிமையில் இருப்போரிடம் இருக்க வேண்டும். உடன் இருக்கக்கூடிய நபர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்காக மருத்துவர் கூறக்கூடிய ஆலோசனையின்படி முன்கூட்டியே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
ஆரோக்கிய சேது மொபைல் ஆப் டவுன்லோட் செய்யப்பட்டு எப்போதும் அது ஆக்டிவ் நிலையில் இருக்கவேண்டும். வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆகியவை ஆன் செய்யப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். உடல்நிலை பாதிப்பில் மோசமான அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
அதாவது, மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன் அளவு குறைவு, நெஞ்சில் வலி ஏற்படுவது, மன நிலையில் குழப்பம் ஏற்படுவது, நறுமணம் உணரமுடியாமல் இருப்பது, பேச்சில் தடுமாற்றம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.