10 கோடியா.. போய் தொகுதியை கவனிங்க.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அட்வைஸ்
Recommended Video
டெல்லி: 10 கோடி ரூபாயை கேட்காதீங்க.. போய் தொகுதியை பாருங்க.. என்று கார்த்தி சிதம்பரத்திற்கு அட்வைஸ் செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு உள்ளிட்டவற்றில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணையை எதிர் கொண்டு வருபவர் கார்த்தி சிதம்பரம். இவர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆலோசனை மற்றும் டென்னிஸ் சங்க பணிகளுக்காக, தான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டியிருப்பதால் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு அளித்திருந்தார்.
மோடி பதவியேற்புக்கு குவியும் 6000 விஐபிகள்.. நேற்றே சமையல் ஆரம்பம்.. அசத்தல் மெனு இதுதான்
வெளிநாடு
மே 7ம் தேதி, இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு ரூ.10 கோடி பிணையத் தொகையுடன், அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு முன்பாக 10 கோடி ரூபாயை பிணையத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்தி விட்டுச் செல்வதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
10 கோடி வேண்டும்
இந்த நிலையில்தான், நீதிமன்ற பதிவுப்பிரிவில், தான் டெபாசிட் செய்த ரூ.10 கோடியை திரும்ப தர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அனிருத்த கோஷ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு முன்னிலையில் இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
வட்டி கட்டுகிறாராம்
அப்போது, கார்த்தி சிதம்பரம் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் பிணையத் தொகையாக வழங்கிய 10 கோடி ரூபாயை திரும்ப தர வேண்டும். அது, கடனாக பெற்றத் தொகை என்பதால், வட்டி கட்டி வருகிறார். அதற்கு நிறைய செலவாகிறது என்று வாதம் முன் வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
தொகுதியை கவனியுங்கள்
மேலும், உங்களது தொகுதியை கவனியுங்கள் என்று நீதிபதிகள் கார்த்தி சிதம்பரம் தரப்பிடம் தெரிவித்தனர். சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியிலிருந்து, கார்த்தி சிதம்பரம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.