பெகசாஸ் ஒட்டு கேட்பு! உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!
டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நிபுணர் குழு விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பலரின் செல்போன் உரையாடல்கள் இதன் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. "பெகாசஸ் புராஜக்ட்" என்ற பெயரில் தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடகங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் அடிப்படையில் இந்த புகார்கள் வைக்கப்படுகின்றன.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், பல்வேறு பத்திரிகையாளர்கள், ஒரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தொடங்கி பல முன்னணி பிரபலங்களின், அரசியல் தலைவர்களின் போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு- வல்லுநர் குழு அறிவிக்கப்படும்?
வழக்கு
பெகாசஸ் என்பது இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ குருப்பின் தயாரிப்பு ஆகும். இஸ்ரேல் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இது செயல்பட்டு வருகிறது. இந்த பெகாசஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்த நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்ஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு கோரிக்கை
உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சூர்யா காந்த் ஆகியோர் விசாரித்து வந்தனர். நீதிமன்ற கண்காணிப்பு தவிர்த்து பெகாசஸ் மூலம் அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டனரா, இதில் உளவு பார்க்கப்பட்ட தகவல்கள் என்னென்ன என்று மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, சிபிஎம் கட்சியின் பிரிட்டாஸ், பிரபல வழக்கறிஞர் எம்எல் சர்மா, மூத்த பத்திரிகையாளர் என். ராம் , மற்ற பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சார்பாக இந்த வழக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பிரமாண பத்திரம் மறுப்பு
இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. இந்த விசாரணையில் முழு விவரங்களை பிரமாண பத்திரம் மூலம் வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டது. அதாவது இந்த பெகாசஸ் ஸ்பைவேர் அரசு மூலம் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை கூற அரசு மறுத்துவிட்டது. இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம். அதனால் இதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்று மத்திய அரசு மறுத்து வந்தது.
உச்ச நீதிமன்றம் கண்டனம்
இதையடுத்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்பாட்டில் தேச நலன், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை தவிர்த்து மற்ற தகவல்களை பிரமாண பத்திரமான தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ஆனால் இதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்து இருந்தது.
மத்திய அரசு பதில்
நீங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் போதிய விவரங்கள் இல்லை. இதில் குறைந்த பட்ச தகவல்கள் மட்டுமே உள்ளன என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு வைத்த வாதத்தில், பெகாசஸ் குறித்து விசாரணை நடத்த அரசு தனி கமிட்டி அமைக்கும் என்று கூறியது. அதாவது நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த தேவையில்லை. நாங்களே விசாரணை நடத்துகிறோம் என்று மத்திய அரசு வாதம் வைத்தது.
கமிட்டி உருவாக்கம்
ஆனால் மனு தாரர்கள் தரப்போ இந்த வழக்கே மத்திய அரசுக்கு எதிராகத்தான் உள்ளது. அவர்களே இதில் எப்படி விசாரணை நடத்தலாம் என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து கடந்த செப்டம்பர் 13ம் தேதி இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் அளிப்பதாக கூறியது. பின்னர் செப்டம்பர் 23ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக அறிவியல் குழு ஒன்று அமைக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும், இதற்கான உறுப்பினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டு இருந்தார்.
இன்று தீர்ப்பு
இதனால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய கமிட்டி உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நிபுணர் குழு விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.
அடிப்படை உரிமை
நீதிபதிகள் தனது தீர்ப்பில் இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் தங்கள் அந்தரங்கத்தை பாதுகாக்கும் உரிமை உள்ளது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்று. இந்தியாவில் எல்லோருடைய தனிப்பட்ட உரிமைகளும், ரகசியமும் காக்கப்பட வேண்டும். மக்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தை அத்துமீறி பார்க்க கூடாது. தேசிய பாதுகாப்பு என்பதை அரசு "ஃப்ரீ பாஸ்" போல பயன்படுத்த முடியாது. தேசிய பாதுகாப்பை அனைத்து பிரச்சனையிலும் காரணம் காட்ட கூடாது.
கமிட்டி விவரம்
பெகாசஸ் குறித்து விசாரிக்க சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி ரவீந்திரன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி தலைவருக்கு உதவியாக முன்னாள் "ரா" உளவு பிரிவு தலைவர் அலோக் ஜோஷி இருப்பார்.
டாக்டர் நவீன் சவுத்ரி, டாக்டர் பிரபாகரன், டாக்டர் அஸ்வின் அணில் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யபட்டுள்ளனர். 8 வாரங்களில் இவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள், என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.