பெகாசஸ்.. அரசு செய்தது தேசத் துரோகம்.. ராகுல் காந்தி ஆவேசம்.. அமித் ஷா ராஜினாமா செய்ய கோரிக்கை
டெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த தயாரிக்கப்பட்ட உளவு சாப்ட்வேர் பெகாசஸ், இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது, இது தேச விரோதம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அமித் ஷா பதவி விலகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற உளவு சாப்ட்வேரை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பல முன்னணி தலைவர்கள் வேவு பார்க்கப்பட்ட ஊடகங்களில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
உலகம் முழுவதிலும் இவ்வாறு பல தலைவர்களும் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தாயின் கள்ளக்காதலனை கொன்று.. சடலத்துடன் பைக்கில் ஊர்வலம் சென்ற மகன்.. அதிர்ந்து போன திருப்பூர்!
இந்தியாவில் உளவு
இந்தியாவை பொறுத்த அளவில் ராகுல்காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், பிரசாந்த் கிஷோர், முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் உளவு பார்க்கப்பட்டதாக தினம் தினம் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ராகுல் காந்தி பேட்டி
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வருகை தந்த ராகுல்காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்த இஸ்ரேல் உருவாக்கிய சாப்ட்வேர் பெகாசஸ். இதை இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும், ஜனநாயகத்துக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது.
நமது அமைப்புகள் மீது விசாரணை
நமது விசாரணை அமைப்புகளுக்கும், நமது நிறுவனங்களுக்கு எதிராகவும் உளவு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்துவதற்கு இந்தியாவில் அதிகாரம் படைத்தவர்கள் யார் என்பது விளக்கப்பட வேண்டும். மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
தேசத் துரோகம்
உளவு சாப்ட்வேரை அரசியலுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கர்நாடகாவில் ஆட்சியை கலைக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். விசாரணையை தடம் மாற்ற பயன்படுத்தியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்துக்கு எதிராக பயன்படுத்தியிருக்கிறார்கள். அனைத்து உச்சபட்ச நிறுவனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இதன் பெயர் தான் தேசத்துரோகம். இதற்கு வேறு பெயர் கிடையாது.
அமித் ஷா ராஜினாமா
எனது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டு இருக்கிறது. ராகுல் காந்தி என்ற ஒரு தனி நபருக்காக நான் பேசவில்லை. நான் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கக்கூடிய ஒரு தலைவர். இந்த மக்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றால் நாட்டு மக்களின் குரல் நசுக்கப்படுகிறது என்று அர்த்தம். இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
பாஜக பதில்
இதனிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜவர்தன் ரத்தூர் அளித்த பேட்டியில், தனது செல்போன் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி சந்தேகித்தால் அதை உரிய விசாரணை அமைப்பிடம் வழங்கிய வேண்டும். உண்மை இருந்தால் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
இரு அவைகளிலும் அமளி
இதனிடையே இரு நாட்களுக்கு பிறகு இன்று மறுபடியும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இந்த உளவு சம்பவம் தொடர்பான விவகாரத்தால் கூச்சல், குழப்பம் நிலவியது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி கேட்டு இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.