பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கு- செய்தித்தாள்களை தவிர வேறு ஆதாரங்கள் உண்டா? உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கு குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணையை தொடங்கியது. பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக செய்தித்தாள்கள் தவிர வேறு ஆதாரங்கள் உண்டா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் 2 வாரங்களாக முடக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு கடும் மவுனமான போக்கை கடைபிடித்து வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள்தான் நாடாளுமன்றத்தை முடக்கி இருப்பதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது. இதனை 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தன.
பெகாசஸ்: ஆணவமாக இருக்கும் மத்திய அரசு- அமித்ஷா மவுனத்தை கலைக்க வேண்டும்- எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை
முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா
இந்தியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள், பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டிருக்கின்றன. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா பயன்படுத்திய பழைய செல்போன் எண்ணும் இந்த ஒட்டுகேட்புப் பட்டியலில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி நீதிபதி அருண் மிஸ்ரா பணி ஓய்வு பெற்றார். அருண் மிஸ்ரா பயன்படுத்திய அந்த செல்போன் எண் 2014-ம் ஆண்டே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார் அருண் மிஸ்ரா. உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் பிரிவின் பதிவாளர்களாக பணிபுரிந்த என்.கே. காந்தி, டி.ஐ. ராஜ்புத் ஆகியோரது செல்போன்கள் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டு கேட்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
அதானி வழக்கு சர்ச்சை
உச்சநீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான எரிக்சன் நிறுவன வழக்கி, அனில் அம்பானி நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றப் பணியாளர்களான தபன்குமார் சக்கரவர்த்தி, மானவ் சர்மா ஆகியோர், அனில் அம்பானி உச்சநீதிமன்றத்துக்கு நேரில் வரத் தேவை இல்லை என திருத்தி இணையத்தில் வெளியிட்டனர். இதனால் இந்த இருவரையும் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். பல மாதங்களுக்குப் பின்னர் பதிவாளர்களான என்.கே. காந்தி, டி.ஐ. ராஜ்புத் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களது செல்போன் எண்களும் ஒட்டு கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முகுல் ரோத்தகியின் ஜூனியர்
மேலும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியின் ஜூனியரான எம். தங்கதுரையின் செல்போன் எண்ணும் ஒட்டுகேட்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முகுல் ரோத்தகியின் வங்கி உள்ளிட்ட சொந்த அலுவல்களில் பெரும்பாலும் தங்கதுரையின் செல்போன் எண் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த செல்போன் எண், பெகாசஸ் ஒட்டு கேட்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
இதேபோல் பத்திரிகையாளர்கள் பலரது செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் என். ராம், சசிகுமார் உட்பட 9 பேர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை தொடங்கி உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்றொரு மூத்த பத்திரிகையாளர் ரஞ்ஜோய் குகதகுர்தாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தமது மனுவில், இந்தியாவில் பேச்சு சுதந்திரத்துக்கு பெரும் சவாலாக இருக்கிறது பெகாசஸ் ஸ்பைவேர் மூலமான ஒட்டுகேட்பு என்பது. ஆகையால் இத்தகைய ஒட்டு கேட்புகளை சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
என். ராம், சசிகுமார் மனு
பத்திரிகையாளர்கள் இந்து என் ராம், சசிகுமார் ஆகியோர் தங்களது மனுவில், மத்திய அரசோ அல்லது அதன் அனுமதி பெற்ற நிறுவனமோ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்டிருந்தால் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும்; செல்போன்களை ஹேக் செய்வது சட்டப்படி குற்றம்; இந்த குற்றங்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என்கின்றன சட்டங்கள் என்பதையும் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளனர். பெகாசஸ் ஸ்பைவேர் மூலமான ஒட்டுகேட்பு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
Recommended Video
என்ன ஆதாரங்கள்?
இன்றைய விசாரணையின் போது, பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த ஆதாரங்கள் அடிப்படையில் வழக்குகள் தொடரக் கூடாது. செய்தித்தாள்கள் அல்லாமல் வேறு ஆதாரங்கள் என்ன இருக்கின்றன? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமெரிக்கா நீதிமன்றத்தில் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.எல். சர்மா தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து காரசார விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் கொடுத்த மனுக்களை மனுதாரர்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.