பெகாசஸ்: என்.ராம் உள்ளிட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் மனுவை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் உளவு பார்த்த விவகாரத்தை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மூத்த பத்திரிக்கையாளர்கள் என்.ராம் மற்றும் சஷி குமார் ஆகியோர் தாக்கல் செய்ய மனு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் உளவு பார்த்த விவகாரத்தை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் என்.ராம் மற்றும் சஷி குமார் ஆகியோர் சார்பில், தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வேவு விவகாரம் குடிமக்களின் தனி சுதந்திரத்தை பாதிக்கிறது, எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கூட கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அடுத்த வாரம் இந்த வழக்கை பட்டியலிடுவோம் என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓவின், பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட இந்திய மொபைல்களை கண்காணித்துள்ளதால் 17 சர்வதேச ஊடகங்கள் இணைந்து நடத்திய விசாரணையில் அம்பலமானது.
பொதுவாக அரசாங்கம் மட்டுமே இந்த சாப்ட்வேர்களை வாங்க முடியும் என்பதால், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை மத்திய அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி இருந்தனர்.
பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட பல இந்தியர்கள் கண்காணிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வேறு அலுவல்களை நடத்தாமல் இதுகுறித்து விசாரிக்க கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தககது.
என்ன நடந்தது?: பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து பெகாசஸ் ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகளும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.