60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி
டெல்லி: 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது, விவசாயிகள் 60 வயது கடந்த நிலையில், ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.
இந்தநிலையில், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலமாக அளித்த அறிவிப்பில் அனைத்து சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இதன்படி 60 வயதை கடந்த தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மாதம் மூன்றாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வரையிலான விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள். இத்திட்டத்தில் 29 வயதான ஒரு விவசாயி சேருகிற போது மாதம் 100 ரூபாயை செலுத்த வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசு செலுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய திட்டம், எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் மூன்று ஆண்டுகளில், 5 கோடி விவசாயிகளை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், அரசுக்கு, ஆண்டுக்கு, 10 ஆயிரத்து, 775 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, மாநில அமைச்சர்களை, தோமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில், நடந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, நரேந்திர மோடி, இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றார்; அவருடன், 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையடுத்து, முதல் கேபினட் அமைச்சர்கள் கூட்டம், கடந்த மாதம், 31ல் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.