புதிய கல்வி கொள்கைக்கு மக்கள் ஆதரவு.. ஆசிரியர்கள், மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.. பிரதமர் மோடி உரை
டெல்லி: புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆளுநர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி வருகிறார். இதில் புதிய கல்வி கொள்கையை, ஆசிரியர்கள் மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர், மக்கள் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அண்மையில் தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கையில் மும்மொழித் திணிப்பு உட்பட பல்வேறு அம்சங்களை பல மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஆனால் தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம், தொழில் கல்விக்கு முக்கியத்துவம் உட்பட பல்வேறு சிறப்புகளுடன் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதனிடையே புதிய கல்வி கொள்கை தொடர்பாக உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு (Role of NEP-2020 in Transforming Higher Education) என்ற தலைப்பில் மத்திய கல்வி அமைச்சகம் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்தது.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெறும் இந்த கருத்தரங்கில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாகிய ஆளுநர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். புதிய கல்வி கொள்கை குறித்து ஆளுநர்களின் கருத்தையும் இதில் மத்திய அரசு கேட்டு வருகிறது..
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றுகின்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, புதிய கல்வி கொள்கையானது மத்திய அரசின் தற்சார்பு இலக்கை ஊக்கப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய கல்வி கொள்கையானது தேசத்தின் இளைஞர்களின் அறிவு மற்றும் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது. நாட்டின் கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் ஆரோக்கியமானவை.
மாணவர்கள் விரும்புகிற கல்வியை கற்கும் வகையில் அமைந்திருக்கிறது புதிய கல்வி கொள்கை.நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கை, கல்வி முறை முக்கியமானது. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வி முறையில் பங்கு இருக்கிறது.புதிய கல்வி கொள்கையில் மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கியமானது.
Recommended Video
புதிய கல்வி கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர். புதிய கல்வி கொள்கையை, ஆசிரியர்கள் மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர், மக்கள் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்துள்ளனர்.புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.