கோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா!
டெல்லி: கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ளும் பொருட்டு, பொதுமக்கள் தாங்களே தடுப்பூசி போடும் நேரம், இடத்தை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக, ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை ஆறு லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'கோ-வின்' செயலியில் விண்ணப்பித்துள்ளனர்.
10 நாட்களில் 1.60 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 69 ஆயிரத்து 27 பேருக்கு மட்டுமே, நேற்று முன்தினம் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியளவில் திங்கள் நிலவரப்படி, முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ள 2 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதுமக்கள் தாங்களாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மையம், நேரம் ஆகியவற்றை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பதிவு செய்து கொள்ள முடியும். தடுப்பூசி போட வேண்டி வயதானவர்கள் வரிசையில் நிற்கும் சிரமங்களை தடுக்கும் பொருட்டு இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
தியேட்டரில் படம் பார்ப்பதற்கு மக்கள் ஆன்லைனில் புக்கிங் செய்வது போன்ற அதே நடைமுறை தான் இங்கேயும் இருக்கும். நிச்சயம் இது மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆரோக்ய சேது ஆப், ஹெல்ப்லைன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு மக்கள் தாங்களாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்,