தமிழக எம்பிக்களின் கோரிக்கை ஏற்பு.. புதிய கல்விக்கொள்கை பற்றி கருத்து கூற 15 நாட்கள் கூடுதல் அவகாசம்
புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கல்வித்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டுள்ளது. மும்மொழிக் கல்வி உட்பட பல்வேறு விஷயங்களை மத்திய அரசு இதில் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதேபோல் கல்வித்துறையில் மாநில அரசுகளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும் பிடுங்கும் அளவிற்கு மத்திய அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்து உள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பு பல தரப்பில் இருந்து எழுந்து வருகிறது.
என்ன எதிர்ப்பு
நாடு முழுக்க கல்வியாளர்கள் பலர் இந்த புதிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த கல்விக்கொள்கை ஏழை மாணவர்களுக்கு எதிரானது. மாணவர்கள் பள்ளிக்கூடம் வரவைக்க இந்த கல்விக்கொள்கை உதவாது. அவர்களை தேர்வு தேர்வு என்று பள்ளியை விட்டே ஓட வைக்க இந்த கொள்கை வழி செய்யும் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருத்து
இதையடுத்து இந்த கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க இந்த மாதம் 31ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. புதிய கல்விக்கொள்கை குறித்த ஷரத்துகளை படித்துவிட்டு, அதில் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியது. இதற்கான அவகாசம் இரண்டு நாட்களில் முடிகிறது.
கோரிக்கை
இந்த நிலையில் கல்விக்கொள்கை அம்சங்களை முழுமையாக படிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் லோக்சபாவில் கோரிக்கை வைத்து இருந்தனர். இன்னும் இதை முழுதாக படிக்க வேண்டும். இந்த புதிய கல்விக்கொள்கையில் நிறைய தவறான கருத்துக்கள் இருப்பதால் அதை ஆராய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
என்ன நீட்டிப்பு
இதில் உள்ள சில ஷரத்துகள் ஏழை மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்றும் கருத்து கூறி இருந்தனர். இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக எம்பிக்களின் கோரிக்கையை அடுத்து அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.