இதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி? நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி!
பிரதமர் மோடியை விட தகுதியான நபர் யாரும் இல்லை என்று மக்கள் கருதியதால், அவர் தேர்தலில் வெற்றிபெற்றார் என்று நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மோடியை விட பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் யாரும் இல்லை என்று மக்கள் கருதியதால், அவர் தேர்தலில் வெற்றிபெற்றார் என்று நோபல் வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி 2019ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்று இருக்கிறார். அவரின் காதல் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வறுமையை ஒழிப்பது தொடர்பான இவர்கள் செய்த ஆய்வுதான் இந்த பரிசுக்கு காரணம். காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான இவர் பிரதமர் மோடி குறித்து அளித்துள்ள பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.
மோடி
அபிஜித் பானர்ஜி அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதனால் மக்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். அதேபோல் அவரை எதிர்த்து யாருமே, அவர் அளவிற்கு தகுதியானவர்கள் என்று மக்கள் கருதவில்லை.
என்ன கொள்கை
ஆனால் மக்கள் அவரின் கொள்கைக்காக வாக்களித்தார்கள், திட்டங்களுக்காக வாக்களித்தார்கள் என்று கூற முடியாது. மக்கள் மோடிக்காக மட்டுமே வாக்களித்தனர். மக்கள் திட்டங்களை கருத்தில் கொண்டு வாக்களித்து இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.
திட்டம் எப்படி
நியாய் திட்டத்தை நான் முழுமையாக வடிவமைக்கவில்லை. காங்கிரஸ் என்னிடம் சில தகவல்களை மட்டுமே பெற்றது. அந்த திட்டம் முழுமையாக வடிவமைக்கப்பட்டது கிடையாது. ஒருவேளை காங்கிரஸ் வென்று இருந்தால் அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டிய நிலை இருந்திருக்கும்.
நிர்மலா சீதாராமன்
ஜேஎன்யூவில் நான் படித்த போதுதான் அமைச்சர் நிர்மலா சீதாராமனும் படித்தார். இருவருமே ஒரே நேரத்தில் அங்கு படித்தோம். நாங்கள் நண்பர்கள் ஆனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. சில பிரச்சனைகளில் நாங்கள் ஒருமித்த குரல் கொடுத்துள்ளோம், என்று அபிஜித் குறிப்பிட்டுள்ளார்.