பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை: ஆளுநர் முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் ஒரு வாரம் அவகாசம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழப்பமான உச்ச நீதிமன்ற உத்தரவு நகலால் பேரறிவாளன் தரப்பு இன்று மீண்டும், முறையிட்டதையடுத்து அவகாசம் தரப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி மாநில அரசு தமக்குள்ள 161-வது பிரிவு அதிகாரத்தின் கீழ் 7 பேரை விடுதலை செய்ய முடியும். இருந்தபோதும் மத்திய அரசு, அப்படி எல்லாம் அதிகாரம் இல்லை என்கிறது. மத்திய அரசின் இந்த முட்டுக்கட்டை வாதத்துக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், பேரறிவாளனை விடுவிக்கும் முடிவு குடியரசுத் தலைவரிடமே இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து இவ்வழக்கின் மீதான விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. அப்போது பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் 3 முதல் 4 நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குப் பதிலாக ஆளுநரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். 3 அல்லது 4 நாள்களுக்குள் ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில், அதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதுதொடர்பாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருக்கிறார். மத்திய அரசின் முடிவு குழப்பமாக இருப்பதாக பேரறிவாளன் சார்பில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழப்பமான உச்ச நீதிமன்ற உத்தரவு நகலால் பேரறிவாளன் தரப்பு இன்று மீண்டும், முறையிட்டதையடுத்து அவகாசம் தரப்பட்டுள்ளது.