வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் நாடாளுமன்றம்.. சுதந்திர தினத்துக்காக இல்லை.. இனி எப்பவுமே இப்படிதான்!
டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. காஷ்மீரில் பதற்றம் நிலவி வருவதால் தீவிரவாத தாக்குதலை தடுக்க ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ராணுவ வீரர்கள், போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்றமும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
#WATCH Dynamic Facade Lighting of the Parliament House Estate. #IndependenceDay2019 pic.twitter.com/XxN4yLHfBd
— ANI (@ANI) August 13, 2019
காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய போதும் நாடாளுமன்றம் இதே போன்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இனி இது எப்போதும் தொடரும் என்கின்றனர்.
மொத்தம் 875 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அவ்வப்போது நிறங்கள் மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் நாடாளுமன்றம் ஆடம்பரமாக காட்சியளிக்கும். இந்த விளக்குகள் அழகையும் சுற்றுப்புற பாதுகாப்பையும் தரும்.
இந்த விளக்குகள் நாடாளுமன்ற லைப்ரரி மற்றும் புதிய கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி ஜெயந்தி ஆகிய விழாக்களின் போது நாடாளுமன்றம் இவ்வாறு அலங்கரிக்கப்படும். ஆனால் தற்போது நிரந்தரமாக இந்த விளக்குகள் ஜொலிக்கும் அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்கெனவே விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.