அயோத்தியில் 0.133 ஏக்கர் நிலம் மட்டுமே சர்ச்சைக்குரியது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மூவ்
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை சுற்றிலும் கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களிடம் திருப்பியளிக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது மத்திய அரசு.
அயோத்தி ராம ஜென்ம பூமி பகுதியில் சர்சசைக்குரிய நிலத்தை சுற்றியுள்ள, 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியிருந்தது. தற்போது இந்த நிலங்களைத்தான், அதன் அசல் உரிமையாளர்களிடம் திருப்பி கொடுக்க உள்ளது, அரசு.
உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி இடத்தை சுற்றிலும் உள்ள 67 ஏக்கர் நிலத்தை, 25 வருடங்கள் முன்பாக, கையகப்படுத்தியுள்ளோம். அயோத்தியில் விவாதத்திற்கு இடமாக உள்ள 0.133 ஏக்கர்கள் நிலத்தை தவிர பிற நிலங்களை அவற்றின் உரிமையாளருக்கே திருப்பியளிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.
1993ல் வாங்கியது
ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கில், இந்த 67 ஏக்கர் நிலத்தை உள்ளடக்க கூடாது. கூடுதல் நிலங்கள் 1993ம் ஆண்டு வாங்கப்பட்டவையாகும். விவாதத்திற்குரியது 0.313 ஏக்கர்கள் மட்டுமே. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் கையகம்
1993ம் ஆண்டு விவாதத்திற்குரிய ராமஜென்ம பூமி பகுதியை சுற்றிலும் உள்ள 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்த நிலங்களும், விவாதத்திற்குரிய பகுதிதான் என்று காரணம் கூறி அப்போது இவை கையகப்படுத்தப்பட்டன. 1994ம் ஆண்டு, உச்சநீதிமன்றமும், இந்த நில கையகப்படுத்துதலை சரி என கூறியிருந்தது.
மத்திய அரசு புது முடிவு
சர்ச்சைகள் முடிவுக்கு வரும்வரை, மத்திய அரசே, இந்த நிலத்தை வைத்திருக்கலாம் என்றும், இதை எந்த தரப்புக்கும் ஆதரவாக வழங்க கூடாது என்றும், உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பிற்கு இந்த நிலத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவேதான், இதுதொடர்பாக உச்சநீதிமன்ற அனுமதியை மத்திய அரசு கோரியுள்ளது. ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பு, விஸ்வ ஹிந்து பரிஷத்தால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும். அந்த அமைப்புக்கு நிலம் திரும்ப தரப்பட்டால், அங்கு, ராமர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விசாரணை தாமதம்
ராம ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமர்வு இன்று வழக்கை விசாரிப்பதாக இருந்தது. ஆனால், நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மருத்துவ காரணங்களால் விடுமுறையில் உள்ளதால் விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.