நிர்மலா சீதாராமன் மீது...தனிப்பட்ட விமர்சனம்...சவுகதா ராய் மன்னிப்பு கேட்க...அமைச்சர் வலியுறுத்தல்!!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுகதா ராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் இன்று துவங்கியது. லோக்சபாவில் இன்று வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை திரிணமூல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் வைத்தார். இதையடுத்து பேசிய நிர்மலா சீதாராமன், ''மற்ற விஷயங்களில் விமர்சனங்களை வைப்பதற்கு பதிலாக சவுக்தா ராய் கொஞ்சம் கவனம் செலுத்தலாம் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக வைக்கபட்ட விமர்சனம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாக அவையில் சிலர் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி , ''பெண் அமைச்சர் ஒருவர் மீது விமர்சனம் வைத்து இருக்கும் சவுகதா ராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இது பெண்கள் மீது வைக்கப்பட்டு இருக்கும் விமர்சனம்'' என்றார்.
இன்று காலை அவை துவங்கியபோது, கேள்வி நேரம் கிடையாது என்றும் தனிப்பட்ட நபர்களின் கோரிக்கை எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. உறுப்பினர்களுக்கு கேள்வி நேரம்தான் அவையின் தங்கமான நேரம். அதை எப்படி ரத்து செய்யலாம் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், கொரோனா தொற்று காரணமாக அவையில் உறுப்பினர்கள் முதன் முறையாக அமர்ந்து கொண்டே பேசினார். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு முன்பு உறுப்பினர்கள் தங்களது இடங்களில் எழுந்து நின்று பேசி வந்தனர்.
இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றம் துவங்கும் முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன் முறையாக ஜிடிபி -24% சரிந்துள்ளது. இதுகுறித்து இந்த தொடரில் எதிர்க்கட்சிகள் விவாதம் கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.