பிப்.1 பட்ஜெட் தாக்கல்... வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர வாய்ப்பு
டெல்லி: தனிநபர் வருமானவரி உச்சவரம்பை வரும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட் பிரதமர் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் நாடாளுமன்ற தேர்தல் வருவதாலும் பல்வேறு சலுகைகள் இடம் பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும் ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்கள் ஆதரவைப்பெறும் வகையில் பாஜக அரசு தனது பொருளாதார தொலை நோக்கு கொள்கைகளை குறிப்பிட்டு காட்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.